வெளிநாட்டு முதலீடுகள் இன்றி நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது. எனவே அவற்றைக் கண்டு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
அதானி மற்றும் அமெரிக்காவின் நியூ போட்டரஸ் நிறுவனங்களின் முதலீடுகள் கிடைக்கப் பெறுவது இலங்கைக்கு அதிஷ்டமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகள் வெளிநாட்டு முதலீடுகளின் ஊடாகவே முன்னேற்றமடைந்துள்ளன.
ஆனால் இலங்கையில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றின் ஊடாக வரவிருக்கும் முதலீடுகளுக்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்படுகின்றன.
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், இலங்கை மின்சாரசபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்பவற்றை வெளிநாட்டு முதலீடுகளுடன் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டியது அவசியமாகும். அதானி நிறுவனம் உலகின் தனவந்த நிறுவனங்களில் ஒன்றாகும்.
அதே போன்று அமெரிக்காவின் நியூ போட்டரஸ் எனர்ஜி நிறுவனத்தில் இலங்கையின் பங்குதாரர்களும் உள்ளனர்.
இவர்களது முதலீடுகள் கிடைக்கப் பெறுவது எமக்கு அதிஷ்டமாகும். எனவே நாம் முதலீடுகளைக் கண்டு அச்சப்பட வேண்டியதில்லை. வெளிநாட்டு முதலீடுகள் இன்றி நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.
கொவிட் தொற்று தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் கூட ஆசியாவிற்கு 1.2 டிரில்லியன் முதலீடு கிடைக்கப் பெற்றது. சீனா, வியட்நாம், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த முதலீடுகள் கிடைக்கப் பெற்றன. ஆனால் இலங்கைக்கு சிறிதளவேனும் கிடைக்கப்பெறவில்லை.
தற்போது சுற்றுலாத்துறை மீளப்புத்துயிர் பெற்று வருகிறது. அத்தோடு சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டுவதற்கான சாத்திப்பாடுகள் காணப்படுகின்றன.
எனவே இடைக்கால வரவு – செலவு திட்டத்தில் வரவு மற்றும் செலவிற்கிடையிலான இடைவெளியை இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.
பிற செய்திகள்