ஆசியக் கிண்ணம்: ஹொங்கொங் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றி!

ஆசியக் கிரிக்கெட் கிண்ணத் தொடரின் நான்காவது லீக் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியக் கிரிக்கெட் அணி, அடுத்த சுற்றான சுப்பர்-4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

டுபாயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹொங்கொங் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹொங்கொங் அணியின் பந்துவீச்சில், சுக்லா மற்றும் கசன்ஃபர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 193 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஹொங்கொங் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹயாட் 41 ஓட்டங்களையும் ஷா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார், ஹர்ஸ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, மற்றும் அவீஷ்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 26 பந்துகளில் தலா 6 சிக்ஸர்கள் மற்றும் பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சூர்யகுமார் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *