தற்போதைய காலகட்டத்தில் பாடசாலை மாணவர்கள் ஒழுக்கத்தை அதிகம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவைகள் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வவுனியா நகரில் உள்ள ஒரு சில பாடசாலை சூழல்களை அவதானித்து வந்தவிடத்தில் சில விடயங்களை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக பூந்தோட்டம் மகாவித்தியாலயம், தமிழ் மத்திய மகாவித்தியாலயம், வைரவர்புளியங்குளம் பகுதியில் சிறுவர்பூங்கா( யங்ஸ்ரார் மைதானம்) அருகில், புகையிரத நிலைய வீதி பன்டாரிக்குளம் பிரதான வீதிக்கு அருகில், கதிரேசன் வீதி குறுக்கு வீதிக்குள் அமைந்துள்ள நெல் களஞ்சியம் பகுதிகளில் மாணவர்களின் அடாவடிகளையும், போதைப்பழக்கங்களையும், பெண் சேஷ்டைகளையும் அதிகமாக காணமுடிகிறது
ஒரிரு தினங்களுக்கு முன் பூந்தோட்டம் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் சில மாணவர்கள் சிவில் உடையில் பாடசாலை முடியும் வேளையில் வீதியில் நின்று மாணவிகளுடன் சேஷ்டைகள் புரிவதை அவதானிக்க முடிந்ததுடன் கீழ் வகுப்பு மாணவர்களை வழிமறித்து வழிப்பறி ( பணம் பறித்தல் ) மாணவிகளின் விபரம் வாங்குதல் போன்று ரெளடிசம் செய்வதை காணமுடிந்தது இவர்களை பெற்றவர்கள் இதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்களா ..? என்ற கேள்வி எழும் போது தான் வெட்ககேடாக உள்ளது.
இதேபோல் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு அருகிலும் கல்வி தினைக்களத்திற்கு முன்பாக உள்ள வீதி, YMCA ஒழுங்கை, மற்றும் பாடசாலை மைதானத்திற்கு முன்பாக உள்ள கற்குழி செல்லும் வீதிகளில் பாடசாலை முடியும் வேளையில் உயர்வகுப்பு மாணவர்கள் சீருடையுடன் கைகலப்பில் ஈடுபடுவதும் வெளி் மாணவர்கள் சிவிலுடன் வந்து பாடசாலை மாணவர்களை அச்துறுத்துவதையும் அவதானிக்க முடிகிறது
இதேபோல் கதிரேசன் வீதியில் உள்ள நெல்களஞ்சிய படுத்தும் பகுதியில் மாலை நேரங்களில் தனியார் வகுப்பிற்கு வரும் மாணவர்கள் அப்பகுதியில் ஒன்றுகூடி சிகரெட் மற்றும் போதைப்பொருள் பாவனைகளில் ஈடுபடுவதாகும் அப்பகுதிவாழ் மக்கள் விசனம் தெரிவக்கின்றனர்.
இதை தட்டிக்கேட்டால் போதையில் குழுவாக ஒன்று சேர்ந்து தமது வீடுகளுக்குள் புகுந்து அடிப்பார்கள் என்ற அச்சத்திலும் மிரட்டலிலும் பலர் இதனை வெளியில் கொண்டுவராது தயங்கி நிற்கின்றனர்
மேலும் யங்ஸ்ரார் மைதானத்திற்கு அருகில் சர்வதேச பாடசாலைக்கு செல்லும் வீதியில் மாலை வேளைகளிலும் சனி, ஞாயிறு தினங்களிலும் இளைஞர் குழு பெரும் அட்டகாசம் செய்வதையும் தனியார் வகுப்பிற்கு என்று பெற்றோர்களுக்கு கூறிவிட்டு மாணவர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி போதைக்கு அடிமையாதலும், பெண் பிள்ளைகளுடன் சேஷ்டைகளை செய்வதையும் வழமையாக கொண்டுள்ளனர்.
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் வகுப்பிற்கு செல்லும் நேரம் முடியும் நேரம் என்பவற்றை ஆராய்ந்து உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் மற்றைய பிள்ளைகளின் எதிர்காலத்தையும் காப்பாறிக்கொள்ளுங்கள்
அதேபோல் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் உடை, மற்றும் சிகை அலங்காரங்களையும் கருத்தில் கொள்ளுங்கள் கிழக்குமாகாணத்தில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களம் சிகை அலங்கார நிலையங்களுக்கு அறிவித்தல் ஒன்று வழங்கியுள்ளது குறித்த அறிவித்தலில் மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் பொழுது பாடசாலைக்கு செல்வதற்கு அமைவாக சிகை அலங்காரம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பின்பற்றி முன்னுதாரணமாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபாரினால் சிகை அரங்கார சங்கத்திற்கு ஒரு அறிவித்தலை வழங்கியுள்ளார் பாடசாலை மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யும்போது மாணவர்கள் என்பதை மனதில் கொண்டு செயல்படுமாறு அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
உண்மையில் இதை பாடசாலை அதிபரோ , திணைக்களங்களோ, சிகை அரங்கார நிலையங்களோ செய்ய வேண்டிய விடயம் அல்ல பெற்றோர்கள் நீங்கள் செய்ய வேண்டிய கடமை உங்கள் பிள்ளைகளின் ஒழுக்கத்தை சீர்செய்து சமூகத்தில் நல்ல பிரஜையாக்க வேண்டிய பொறுப்பு உங்களிடமே உள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள்
சிலவேளைகளில் ஒருசிலர் கேள்வி எழுப்பலாம் ஏன் ஆசிரியர்கள் தம் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தையும் கடுமையாக கற்பிக்கலமே என்று.. ஆனால் இதில் எத்தனை பெற்றோர்கள் ஆசிரியர் தண்டிக்கிறார் என்றதும் கருத்தில் கொள்ளாமல் இருப்பீர்கள்..? அதிகமானவர்கள் உடனடியா காவல் நிலையத்திற்கு சென்று ஆசிரியர் அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்வதிலேயே முன்னிற்கு நிற்பார்கள் தம் பிள்ளைமேல் உள்ள தவறை கேட்டு அதை திருத்துவதில் அக்கறை எடுக்கும் பெற்றோர்கள் விரல் அளவில் மாத்திரமே உள்ளார்கள் என்பதும் வேதனைக்குறிய விடயமே அதற்காக ஆசிரயர்கள் அனைவரும் சரியாக தான் செயல்படுகிறார்கள் என்றும் கூறமுடியாது ஒருசில ஆசிரியர்களின் நடவடிக்கைகள் தவறாக தான் உள்ளது அதனை மேல் மட்டங்கள் ஆராய்ந்து கடும் நடவடிக்கை எடுப்பதனை அவதாணித்தால் மேலும் மாணவர்கள் திருந்துவார்கள் என நினைக்கின்றோம்
எனவே பெற்றோர் ஆசிரியர்களே சமூக நலன்விரும்பிகளே உங்கள் கண் முன் மாணவர்கள் ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டால் நீங்களே அதனை தட்டிக்கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் நீங்கள் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து செயல்பட்டால் மாத்திரமே எதிர்கால நம் சந்ததியினரை சிறப்பாக வழிநடத்த முடியும்.


பிற செய்திகள்