
நீர் கட்டண மறுசீரமைப்பின் கீழ், ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட நீர்க் கட்டணம், ஒக்டோபர் மாதக் கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் [வணிக] பியல் பத்மநாத் தெரிவித்தார்.
இன்று முதல் நீர் கட்டணத்தை 130 வீதத்தால் அதிகரிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி 5 யுனிட் நீரைப் பயன்படுத்தும் வீடொன்றுக்கு குறைந்தபட்ச நீர்ப் பாவனைக்கு இதற்கு முன்னர் செலுத்திய 123 ரூபா நீர்க் கட்டணம் 264 வீத அதிகரிப்புடன் 448 ரூபாவாக மாறியுள்ளது.
முதல் 5 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.12 ஆக இருந்து கட்டணம் ரூ.20 ஆகவும், 6 முதல் 10 யூனிட்டுகளுக்கு ரூ.27 ஆகவும், 11 முதல் 15 யூனிட்டுகளுக்கு ரூ.34 ஆகவும் வீட்டுப் பாவனைக்கான குடிநீர் கட்டணம் 67 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
16 முதல் 20 யுனிட்டுகளுக்கான தண்ணீர் கட்டணம் 68 ரூபாயாகவும், 21 முதல் 25 யுனிட்களுக்கு யுனிட் ஒன்றிற்கான கட்டணம் 99 ரூபாயாகவும், 26 முதல் 30 யூனிட்களுக்கு 150 ரூபாயாகவும், 31 முதல் 40 யுனிட்களுக்கு 179 ரூபாயாகவும், 41 முதல் 50 யுனிட்களுக்கு 204 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
51 முதல் 75 யுனிட்டிற்கான கட்டணம் 221 ரூபாயாகவும், 75 யுனிட்டுக்கு மேல் ஒரு யுனிட்டுக்கு 238 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டி உள்ளது