600,000 மெற்றிக் தொன் தரமற்ற நச்சு அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது: மஹிந்த அமரவீர

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட தோல்வியின் விளைவாக, இலங்கைக்கு கிட்டத்தட்ட 600,000 மெற்றிக் தொன் தரமற்ற மற்றும் நச்சு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட மோனோகுரோடோபோஸ் மற்றும் கிளைபோசேட் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் நெல் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் நாடுகளில் இருந்து இலங்கை கிட்டத்தட்ட 600,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக அவர் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் பயிரிடப்படும் அரிசியைவிட இந்த இறக்குமதி அரிசி மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது. இலங்கையில் மொனோகுரோட்டோபோஸ், க்ளைபோசேட் போன்ற இரசாயனங்கள் நெல் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படுவதில்லை.

எனினும் சில தரப்பினரின் நடைமுறைச் சாத்தியமற்ற ஆலோசனையின் அடிப்படையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விரும்பினோம். நெல் அறுவடையின் பற்றாக்குறையை சமாளிக்க தரமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் அரிசியை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இயற்கை விவசாயம் தொடர்பில் தவறான மற்றும் நடைமுறைக்கு மாறான ஆலோசனைகளை வழங்கிய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் என அழைக்கப்பட்டவர்கள் இன்று மௌனமாக இருக்கின்றனர்.

இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையே இன்று நாடு எதிர்நோக்கும் அழிவுக்கு முக்கிய காரணம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *