நாட்டின் பல பாகங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்பதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக நாட்டின் சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருதால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதால் , ஆற்றங்கரையோரங்களை அண்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் அவதானமாகவும் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய, ஊவா, சப்ரகமுவ, பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால், பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும், வீதிகளில் வாகனங்களை செலுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படியும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் எதிர்வரும் சில தினங்களுக்கு 75 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி காணப்படும் எனவும், நாட்டின் கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ளவதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிற செய்திகள்