துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழப்பு – ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அமைப்பாளர் கைது!

கேகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் லக்மன் திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 36 வயதுடைய பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று காலை கண்டெடுத்தனர்.

கேகாலை ஹபுதுவல பகுதியைச் சேர்ந்த பெண் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அலுவலகத்திற்கு அருகிலுள்ள அறையொன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரை இன்று காலை அவரது வீட்டிலிருந்து தேர்தல் அமைப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மார்பில் சுடப்பட்ட நிலையில் துப்பாக்கியும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *