IMF உதவி பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திருப்புமுனை!

சர்வதேச நாணய நிதியத்தால் நான்கு வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் (Extended Fund Facility) பெற்றுக் கொள்வதற்கான அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இ அரசாங்கத்துக்கு முடிந்திருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

சர்வதேச நாணய நிதியத்தினூடாக நான்கு வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் (Extended Fund Facility) பெற்றுக்கொள்வதற்கு அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இன்று காலை அரசாங்கத்துக்கு முடிந்தது.

இலங்கை முகங்கொடுத்துவரும் ஆழமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு எடுக்கும் முயற்சிகளில் இது மிக முக்கியமான திருப்புமுனையாகும்.

மேலும், அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டை அடுத்து இலங்கை கடன் மறுசீரமைப்புத் திட்டத்தில் கடன் நிலைபேறான தன்மையை (Debt Sustainability) அடைவதற்கு ஆதரவளிப்பதாக இலங்கைக்குக் கடன் வழங்குபவர்களின் உறுதிப்படுத்தல் (Adequate Financing Assurance) அவசியமாகும்.

மேலும்,அதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் (Executive Board) அனுமதியைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். அடுத்து இருதரப்பு உத்தியோகபூர்வ கலந்துரையாடல் (Official Bilateral Level Discussion) ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதனுடன் எமக்கு விசேடமாக இருதரப்பு மற்றும் பல் தரப்பு அபிவிருத்திப் பங்காளர்களிடமிருந்து (Development Partners) கடன் பெற்றுக்கொள்வதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. அதன்மூலம் எமக்கு அத்தியாவசிய செயற்பாடுகளுக்கு நிதி கிடைப்பதுடன், பொருளாதார மற்றும் மக்களின் வாழ்க்கையினைப் படிப்படியாக இயல்பு நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கமுடியும்.

இன்று ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடு எமது முயற்சியின் பாரிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தாலும், இது ஓர் ஆரம்பம் மட்டுமே என்பதையும், மேலும் நீண்ட பயணத்தை நாம் செல்லவேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களுக்கு தீர்வு காண நாம் பெரும் அர்ப்பணிப்புக்களை எதிர்காலத்தில் செய்ய வேண்டியுள்ளது. நாம் பல தசாப்தங்களாக எமது சேமிப்பை விட அதிகமான அளவை நுகர்வு செய்துள்ளோம். அதன்மூலம் எமது கடன் தொகை பாரியளவு உயர்ந்துள்ளது. பல்வேறு காரணங்களால் நாட்டின் வருமானம் மிகவும் குறைந்துள்ளது.

இதனால், சுகாதார, கல்வி, பொதுப் போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள எம்மால் முடியாமல் போயுள்ளது. கனிய எண்ணெய், மின்சாரம் போன்ற பயன்பாடுகளை நாம் நீண்ட காலமாக குறைந்த விலைக்குப் பயன்படுத்தி வந்துள்ளோம்.

இதன் விளைவாக, பாரிய வர்த்தகப் பற்றாக்குறை உருவாக்கப்பட்டு, நாணய மாற்று விகிதங்கள் பலவீனமடைந்தன. அரசாங்க முயற்சியாண்மைகள் பல தசாப்தங்களாகப் சரியாக முகாமைத்துவம் செய்யப்படவில்லை. அதனால் அந்த நிறுவனங்கள் பாரியளவில் நட்டமடைந்துள்ளன. அதுவும் பொதுமக்களுக்கு பாரியளவான வரிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு பலவீனங்கள் மற்றும் பிழையான கொள்கைத்தீர்மானங்கள் காரணமாக நாடு கடனை திரும்பிச் செலுத்தாதது மற்றும் ஆழமான பொருளாதார நெருக்கடிக்குள் சென்றுள்ளது.

இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு அவ்வாறான ஆழமான மற்றும் விரிவான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிவரும். எந்தத் தரப்பினர் அதிகாரத்தில் இருந்தாலும் இந்தச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம். இதன்மூலமே நிலைபேறான மற்றும் விரிவான பொருளாதார விருத்தியை அடைய முடியும்.

கடந்த ஐந்து மாதங்களாக இந்த மறுசீரமைப்புகள் கொண்ட வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்தது. அந்த வேலைத்திட்டத்துக்கு அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு தற்பொழுது கிடைத்துள்ளது. இந்தக் கடினமான சீர்திருத்தங்களை செயற்படுத்துவதே மிகவும் சவாலானது. பொதுமக்கள் பொருளாதார ரீதியில் கஷ்டத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வது மிகவும் கடினமானது என்பதையும் அரசாங்கம் அறிந்துள்ளது.

நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் நாட்டைக் காப்பாற்றவும், இறுதியில் உயர்ந்த அபிவிருத்தியை அடையவும் இந்த சீர்திருத்தங்கள் ஏன் அவசியம் என்பதை புரிந்துகொள்வது முக்கியமான விடயமாகும். வங்குரோத்து நிலையிலான நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று, எமது எதிர்கால சந்ததியினருக்கு நல்ல எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதியும் எமது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்தவுடன் அது தொடர்பாகவும் விபரங்களை இந்தப் பாராளுமன்றத்துக்கு நாம் முன்வைக்க நடவடிக்கை எடுப்போம் என்பதையும் நான் இறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நன்றி.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *