கேள்வி: இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர்களின் பிரச்சினைகள், இறுதிப்போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் கரிசனை காட்டப்படுமா? அல்லது தென்னிலங்கையில் தற்போது இடம்பெறும் கைதுகள், கருத்துச் சுதந்திர ஒடுக்குதல்கள் தொடர்பில் மனித உரிமைகள் பேரவை அதிகளவு அக்கறை செலுத்துமா? எதற்கு வாய்ப்பு அதிகம்?
பதில்: ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான விவகாரம் ,பிரிவு 2இன் கீழ் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி தமிழர்களின் இனவழிப்பை மூடிமறைக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது. அந்தவகையில் இந்தக் கூட்டத்தொடரில் , சிறிலங்காவில் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி, காலிமுகத்திடல் போராட்டம் , அதை அடக்கும் விதமாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்பவற்றைப் பூதாகரமாக்கி தமிழின அழிப்பை மூடிமறைக்கும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கமும் சிங்கள சிவில் அமைப்புகளும் ஐ.நா. வில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றன.
அந்தவகையில் காலிமுகத்திடலில் தனிநபர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் குறித்த 850 மேற்பட்ட அறிக்கைகளை ஐ.நா .மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் விசேட பிரதிநிதிகள் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் சிங்கள- சிவில் அமைப்புகள் அனுப்பி வைத்திருந்தன. குறிப்பிட்ட அறிக்கைகள் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் தமது துறைசார்ந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கும் ஐ.நா. வின் விசேட பிரதிநிதிகளுக்கான தரவுகளாக அமையும். இந்த விசேட பிரதிநிதிகளின் அறிக்கைகளில் உள்ள விடயங்களே, ஆணையாளரின் அறிக்கையிலும் தாக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.வழமை போன்று தமிழர் தரப்பினராகிய நாம் உரிய செயற்பாடுகளை உரிய காலத்தில் முன்னெடுக்காமால், ஐ.நா. விடம் இருந்து பலமான அறிக்கைகளை எதிர்பார்க்க முடியாது.
அதனடிப்படையில் தற்போதைய சூழலில் பல நாடுகளும், சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தை வரவேற்பதுடன் அதற்கு வலுச்சேர்க்கும் அறிக்கைகளும் தீர்மானமும் அமையும். அத்துடன் மீண்டும் இரண்டு வருட கால அவகாசத்தை சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்குவார்கள்.அதற்கான சந்தர்ப்பங்களே அதிகம்.
கேள்வி: அப்படியானால் ஜெனிவாவில் இம்முறை புதிதாக வரவிருக்கும் தீர்மானம் என்னென்ன விடயங்களை உள்ளடக்கி இருக்கும்?
பதில்: கடந்த தீர்மானங்களைப் போன்றே இந்தத்தீர்மானமும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் விடயங்களை மறைத்து ஆட்சிமாற்றத்தை வரவேற்று கடந்த தீர்மானங்களில் முன்மொழியப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் மீண்டும் நீடிக்கப்படும். அத்துடன் 46/1 தீர்மானத்தில் முன்மொழியப்பட்டதன் அடிப்படையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் சாட்சியங்களைச் சேகரிக்கும் குழுவுக்கான புது பாதீடு( budget ) ஒதுக்கப்படும். மேலும் மேற்கத்தேய நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக ,சர்வதேசத்தை ஏமாற்றும் வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் ஆகியவற்றை நீக்குவதாகவும் , காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வழங்குவதாகவும் ஒரு நாடகத்தை ரணில் அரசாங்கம் அரங்கேற்றத் தொடங்கியுள்ளது. சிறிலங்கா அரசின் இந்தக் கபட நாடகம் வரவிருக்கும் தீர்மானத்தின் வரைபில் நற்செயலாகக் குறிப்பிடப்படும்.
இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் மேற்குலக நாடுகளின் ஊடகப்பேச்சாளராக செயற்படும் குறிப்பிட்ட அரசியல்வாதியும் ,தனது ஊடகப் பேச்சாளர் பணியை தமிழர்கள் மத்தியில் முன்னெடுக்கத் தொடங்கிவிட்டார். கடந்த பத்து வருட காலமாக ஐ.நா வில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளே எழுதுகின்றன. அவர்கள் ஆரம்பத்தில் தீர்மானத்தின் வரைபை எழுதும் போதே இனவழிப்பால் பாதிக்கப்பக்கப்பட்ட தமிழர்களை வெளிப்படுத்தாத வகையில் நலிவான வரைபையே எழுதி முன்வைக்கின்றனர். அந்தவகையில் சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனவழிப்பை ஏற்றுக்கொள்ளாமலும் அதற்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தாமலும் ,இனப்பிரச்சினைக்கான தீர்வை சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறைக்குள் முடக்குகின்றனர். ஆனால் சிரியா, பெலாருஸ், ரோஹிங்கியா வரிசையில் தற்போது உக்ரைன் போன்ற நாடுகளில் நடைபெறுவது இனவழிப்பு என குறிப்பிட்டு பேசுகிறார்கள். குறிப்பாக உக்ரைன் விவகாரத்தில் போர் தொடங்கி ஐந்து நாட்களுக்குள்ளாகவே அதுவொரு இனவழிப்பு என பிரித்தானியாப் பிரதமர் விளித்து கூறினார். ஆனால் ஐ.நா. வின் அறிகையின்படி சிறிலங்காவில் இறுதிப் போர்க் காலப்பகுதியில் 70 ஆயிரம் தொடக்கம் ஒரு லட்சம் வரையில் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையிலும், 13 வருடங்களாக பிரித்தானியா அரசின் வாய்மூல அறிக்கைகளிலோ அல்லது முன்மொழியும் தீர்மானங்களிலோ இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்படவில்லை. இவற்றைப் பார்க்கும் போது சிறிலங்கா அரசை பாதுகாப்பதற்கே பிரித்தானியா முன்னின்று செயற்படுவதைக் காணமுடிகிறது.
கேள்வி: ஆணையாளரின் அறிக்கை சிறிலங்காவை நெருக்கடிக்குள் தள்ளவேண்டுமானால் தமிழர் தரப்பு என்ன நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்?
பதில்: ஆணையாளரின் அறிக்கைகள் பலமானதாக அமையவேண்டுமாக இருந்தால், ஐ.நா. வின் அனைத்துப் பொறிமுறைகளையும் சரியான வகையில் உள்வாங்கி காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்புகள் ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் ஒப்பந்த அமைப்புகள் (treaty bodies) ஆகியவற்றுக்கு , சிவில் சமூக அமைப்புக்களும் தனிப்பட்ட நபர்களும் தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் முறைப்பாட்டு அறிக்கைகளை அனுப்பிவைக்க வேண்டும்.ஏனெனில் ஆணையாளரின் அறிக்கைக்கான தரவுகள் ஐ.நா. வின் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் ஒப்பந்த அமைபுக்களின் பிரதிநிதிகளின் அறிக்கைகளிலிருந்தே திரட்டப்படுகின்றன. அந்தவகையில் கடந்த வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற கூட்டத்தொடரில் வெளிவந்த ஆணையாளரின் அறிக்கை தமிழர்களான எமக்கு சற்று ஆறுதலாக அமைந்திருந்தது. அதில் -ஐ.நா. வின் அறிக்கைகளில் – சிறிலங்காவில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கு காரணம் கடந்த 2020 ஆம் ஆண்டு முழுவதும் ஈழத்தில் தமிழர்கள் எதிர்நோக்கிய வன்முறைகள் தொடர்பில் 350 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட முறைபாடுகளை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பெற்று , உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயற்படும் ஐ.நா. வின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளினூடாக மேலே குறிப்பிட்ட பொறிமுறைகளில் வழக்குகளாகப் பதிவுசெய்ததே ஆகும். மேலும் எமது பிரச்சினை தொடர்பில் முதன்முறையாக ஐ.நா. வின் சிறப்பு அறிக்கையாளர்கள் ஒன்றிணைந்து கடந்த வருடம் பெப்ரவரி மாதம் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை நாம் பலதடவைகள் எடுத்துக்கூறியும் தாயகத்தில் இருந்து பாதிக்கப்பட்ட தரப்புகள் மற்றும் சிவில் சமூகத்தினரிடம் இருந்தும் எவ்வித அறிக்கைகளும் எமக்கு கிடைக்கவில்லை. ஆனால் சிங்கள மற்றும் முஸ்லிம் தரப்பினரால் வழமைபோன்று பல அறிக்கைகள் ஐ.நா.வின் பொறிமுறைக்குள் தொடர்ந்தும் பதிவேற்றப்பட்டுக் கொண்ருக்கின்றன.
அதனடிப்படையில் இம்முறை வெளிவரும் ஆணையாளரின் அறிக்கையும் சிறிலங்கா ழுழுவதும் பிரச்சினை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுவதுடன் ஆட்சிமாற்றத்தினை நற்செயலாக குறிப்பிட்டு காலிமுகத்திடல் போராட்ட வன்முறைகளை ’செல்லமாக’ கண்டிக்கும் வகையிலான, சிங்களத்தரப்புக்கு ஆதரவான ஒன்றாகவே காணப்படும். அதேவேளை தமிழர்களின் இனவழிப்பை இருட்டடிப்பு செய்து தமிழர்களின் நீதிப்பொறிமுறையை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும் அது அமைந்திருக்கும் என ஊகிக்கலாம். இவற்றை கடந்து ஆணையாளரின் அறிக்கை மிகவும் பலமானதாக வெளிவருவது என்பது தமிழர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்களும், அமைப்புக்களும் வருடத்தில் வெறுமனே ஓரிரு கோரிக்கை மனுக்களை அனுப்புவதுடன் மட்டும் நிற்காமல் அதற்கான அறிக்கைகளை ஐ.நா. வின் சிறப்பு அறிக்கையாளர்கள் (Special Procedures) மற்றும் ஒப்பந்த அமைப்புக்கள் ( Treaty Bodies ) ஆகியவற்றுக்கு எம்மால் முடிந்தளவு அதிகமாக அறிக்கைகளை தொடர்ச்சியாகச் சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் அறிக்கைகளின் தொகுப்பாகத்தான் ஆணையாளரின் அறிக்கை தயாரிக்கப்படுகின்றது.
கேள்வி: ஐ.ந. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தீர்மானிக்கப்பட்ட ‘சாட்சியங்களைச் சேகரிப்பதற்கான அலுவலகம் ’இன்னமும் சிறிலங்காவில் திறக்கப்படவில்லையே?
பதில்: சாட்சியங்களை சேகரிப்பதற்கான அலுவலகத்தை சிறிலங்காவில் திறப்பதாக 46/1 தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை. அதில் சாட்சியங்களை சேகரிப்பதற்கான ஒரு குழு உருவாக்கப்படும் என்றே குறிப்பிட்டப்பட்டது. அந்தக் குழு பல்வேறு நாடுகளிலும் வாழும் பாதிக்கப்பட்டவர்களிடம் சாட்சியங்களைச் சேகரிக்கும் பணியை ,46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சிறிது காலத்தில் இருந்து முன்னெடுத்துவருகின்றது. எமக்குக் கிடைத்த தகவல்களின்படி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் (OHCHR) விசாரணைக் குழுவுக்கு கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் அமைப்புகள் மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் பினாமி அமைப்புகள் ஊடாக தமிழர்களுக்கு எதிரான முறைப்பாடுகளே அதிகமாகப் பதியப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்களோ அவ்வாறே ஐ.நா விலும் அதன் பொறிமுறைகளை உள்வாங்கி, சிங்கள சிவில் அமைப்புகளும், இராணுவ அமைப்புகளும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றன.
இவ்விடயத்தில் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் – மறைமுகமாக சிங்கள சிவில் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள -வெள்ளக்கார அமைப்பு ஒன்று இந்த விசாரணைக் குழுவுக்கு அனுப்புவதற்காக தமிழர்களிடம் ஆதாரங்களைச் சேகரிக்கும் வேலையை கடந்த சில மாதங்களாக முன்னெடுத்துவருகின்றது. அதற்கும் தமிழர்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சொற்ப ஆதாரங்கள் குறிப்பிட்ட சில தமிழர்களால் அந்த வெள்ளக்கார அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் அமைப்புகள் ஊடாக முன்னெடுக்கும் போது ,அவற்றுக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் ,தமிழரின் இறையாண்மையும் பாதுகாக்கப்படும்.
கேள்வி: மனித உரிமைகளை மீறியவர்களுக்கு எதிராக சர்வதேச நாடுகள், தங்களின் நாடுகளில் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளல் மற்றும் தனிநபர்கள் மீதான தடைகளை விதித்தல் போன்றவற்றைச் செய்ய முன்வரவேண்டும் என ஆணையாளரால் கூறப்பட்ட போதும், முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை, சிங்கப்பூரில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க அந்த நாட்டின் சட்டமா அதிபர் தரப்பு விரும்பவில்லை . ஏனைய நாடுகளும் இதேபோக்கை கடைப்பிடிப்பது ஏன்?
பதில்: முதலில் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய நாங்கள்தான் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்யவேண்டும். அந்தவகையில் அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் சர்வதேசக் குற்றங்களுக்கான பிரிவுகளின் கீழ் அரசதரப்பு சட்டத்தரணிகளின் ஊடாக வழக்குகளை பதிவுசெய்யவதன் மூலமே விசாரணைகளை மேற்கொண்டு தனிநபர்கள் மீதான தடைகள் விதிக்கப்படும். இவ்விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்பாகிய நாம் எந்த நகர்வுகளையும் முன்னெடுக்காது சர்வதேச நாடுகள் தாமாக தனிநபர்கள் மீதான தடையை விதிக்குமென எண்ணுவது அபத்தமானதே.
கேள்வி: தமிழ்த் தேசியக் கட்சிகளின் கடிதங்கள், பொது அமைப்புக்களின் கடிதங்கள் என்பன இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்தக் கடிதங்கள் எவ்வகையான தாக்கங்களை உருவாக்கும்?
பதில்: தனியே கடிதங்கள் அனுப்புவதாலும் ,ஊடக அறிக்கைகளை வெளியிடுவதலும் மட்டும் எதனையும் மாற்ற முடியாது. இவற்றைத் தாண்டி பாதிக்கப்பட்ட தரப்புக்களின் குரல்கள் ஐ.நா.வுக்குள் ஒலிக்க வேண்டும். அந்தவகையில் தமிழ்மக்களாகிய நாம், இதுவரை காலமும் வெறுமனே கூட்டத்தொடரை மட்டுமே முதன்மைப்படுத்தி வேலை செய்கிறோம். அதிலும் கூட்டதொடரினைப் பொறுத்த மட்டில் , தனியே அதன் பொறிமுறைகளுக்குள் அங்கு வந்து நின்று பேசிவிட்டுப் போவதில் பிரயோசனமில்லை. அங்கு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமோ அதனை முன்னெடுக்க வேண்டும். ஐ.நா.வின் பொறிமுறைக்குள் ,முதலில் பாதிக்கப்பட்ட தரப்பினர் தமது பாதிப்புக்களை தெரியப்படுத்த வேண்டும்.
பக்க அறை நிகழ்வுகளைச் செய்ய வேண்டும், வாய்மூலமான அறிக்கைகளை வழங்க வேண்டும் ,எழுத்துமூல அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதனோடு மட்டும் நிற்காது அவற்றினை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்ப்பதிலேயே வெற்றி அடங்கியிருக்கிறது.இவை எதனையும் செய்யாது தனியே நாங்கள் ஒன்றணைந்து அறிக்கை மாத்திரம் விடுவதனால் எவ்வித பிரயோசனமும் இல்லை.அத்தோடு இந்த உப்புச்சப்பற்ற கடிதங்களை எழுதுவதையும், இங்கு வந்து பேசிவிட்டுப் போவதையும் மக்களுக்கு காட்டி ‘ நாம் இராஜதந்திரிகளுடன் வேலை செய்கின்றோம் ’என்ற தவறான கருத்துருவாக்கத்தை தமிழர்கள் மத்தியில் எம்மவர்கள் சிலர் உருவாக்குகிறார்கள்.
இதேவேளை, சிங்கள அமைப்புகள் ஐ.நா. வின் பொறிமுறைகளைச் சரியாக பயன்படுத்தி வேலை செய்வதால், சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பது கூட ஐ.நா வின் அறிக்கைகளில் மூடி மறைக்கப்படுகின்றது. தமிழ்த்தேசியக் கட்சி சார்ந்தவர்கள் முதலில் ஒரு அறிக்கைக்கான பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய தரவுகளை பதிவேற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு விசேட பிரநிதிகளுக்கும் அன்றாடம் நாம் எதிர் நோக்கும் பிரச்சினைகளைத் தெரியப்படுத்த வேண்டும்.
இப்போது இருக்கும் சூழலில் தமிழர்கள் இருக்கின்ற பொறிமுறைகளையே சரிவரப் பயன்படுத்தவில்லை. அதனால் தான் விசேட பிரதிநிதிகளுக்கோ, ஐ.நா வின் உப கட்டமைப்புக்களுக்கோ (ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 44 விசேட பிரதிநிதிகளும் 9 உப பிரிவுகளும் இருக்கின்றன .அதில் 170 வரையான வல்லுநர்கள் இருக்கிறார்கள்) நாங்கள் தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தால் தான், அவர்கள் தமிழர்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன எனப் பேசத் தொடங்குவார்கள். அந்தக் குறைபாடுகளை தமிழர் தரப்பு இல்லாமல் செய்ய வேண்டும். அதனைவிடுத்து வெறும்கோரிக்கைகளுடன் நிற்காமல் ,பாதிக்கப்பட்ட தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கும் உரியவர்கள் முன்வர வேண்டும். அவ்வாறு முன்வந்தாலேயே எங்களுடைய செயற்பாடுகளை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலகுவாக முன் நகர்த்தலாம்.

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
