
போராட்டக் காரர்கள் மீது காலாவதியான கண்ணீர் புகைக் குண்டுகளை நடாத்தியமை தொடர்பிலான தகவல்களை, தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமையும் என தெரிவித்து வெளிப்படுத்துவதை மறுத்தமையானது எந்த அடிப்படையிலானது என எழுத்து மூலம் அறிவிக்குமாறு தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான ஆணைக் குழு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துடன் தொடர்புபட்ட தகவல்கள் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டிருந்த நிலையில், அத்தகைய தகவல் கோரிக்கைகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் செயற்படாமை தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் இதன்போது ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
காலாவதியான கண்ணீர்ப் புகைக் குண்டுகள் தொடர்பில், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன முன்வைத்த தகவல் கோரிக்கை பிரகாரம், அந்த தகவல்களை வழங்காமை தொடர்பில் தகவல் அறியும் உரிமைகள் தொடர்பிலான ஆணைக்குழுவில் அந்த ஊடகவியலாளரால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மேன்முறையீடு பண்டாரநாயக்க சர்வதேச மா நாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே பொலிசாருக்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது