
மட்டு செப் 3
கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபுல்லுமலை பிரதேசத்தில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரியபுல்லுமலை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான (42) வயதுடைய நவரெட்ணம் புஸ்பவதி என்பவரே யானை தாக்கி மரணமானவராவார்.
கடந்த 28ஆம் திகதி தனது வதிவிடத்திலிருந்து கோப்பாவெளி பிரதேசத்திலுள்ள கோயிலுக்கு வழிபாட்டுக்காக சென்று கொண்டிருக்கும் போது வீதியோரத்தில் மறைந்திருந்த யானை தாக்கியதில் படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கமைவாக சம்பவ இடத்துக்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைந்தார்.