
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டிலிருந்து சென்ற பின்னர் பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்க்ஷ ஆகியோர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
மாலைதீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் 50 நாட்களை கழித்த பின்னர், கோட்டாபய ராஜபக்க்ஷ இவ்வாறு நேற்று (2) இரவு 11.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (3) அதிகாலை 12.50 மணிக்கு, கொழும்பு 7 , பெள்ளாலோக்க மாவத்தைக்கு முகப்பாக அமைந்துள்ள மலலசேகர மாவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு இல்லத்துக்கு வருகை தந்தார்.
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை பிரகாரம் இதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாடு திரும்பிய நிலையில் , அவருக்கு கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தைக்கு முகப்பாக மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள அரச வீடு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ வசிக்கும் வீட்டுக்கு அருகே இந்த வீடு அமைந்துள்ளதுடன், அவ்வீடானது முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த போது பயன்படுத்திய வீடாகும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, நாடு திரும்பி தனது மிரிஹானை இல்லத்தில் வாழ விரும்பினாலும், அவரது பாதுகாப்பை கருத்திற் கொண்டு, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்க வேண்டிய வரப்பிரசாதம் என்ற அடிப்படையில் இந்த வீட்டை வழங்க அரசாங்கம் முடிவெடுத்தது.
அத்துடன் கோட்டாபய ராஜபக்க்ஷவின் பாதுகாப்புக்கு என சிறப்பு பொலிஸ் படையணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் கீழ், அதிரடிப் படையினரை உள்ளடக்கியதாக இந்த சிறப்பு படையணி அமைக்கப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்