புத்தளம் கற்பிட்டி – கண்டல்குடா பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, பாதியில் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படும் தேசிய இளைஞர் படையணி பயிற்சி மத்திய நிலையத்தின் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராகவும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சராகவும் பதவி வகித்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிந்தனையின் கீழ் கற்பிட்டி கண்டல்குடா – நாச்சிக்கள்ளி சுது பியகம எனும் பகுதியில் அப்போதைய தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சரான நிரோஷன் பெரேராவினால் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதுடன், அதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மேற்பார்வையில் இதற்கான நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும், காலப் போக்கில் அவை முழுமையாக பூர்த்தி செய்யப்படாது கிடப்பில் இருப்பதாக அந்தப் பகுதியிலுள்ள மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இளைஞர், யுவதிகளிடையே ஒழுக்கம், தலைமைத்துவம், ஆளுமை மற்றும் விருத்தி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பலம் மிக்கதொரு இளைஞர் படையணி ஒன்றை கற்பிட்டி பகுதியிலும் உருவாக்கும் நோக்கில் மேற்படி தேசிய இளைஞர் படையணி பயிற்சி மத்திய நிலையத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மேற்படி உயரிய சிந்தனையில் முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் பாதியில் கைவிடப்பட்டுள்ளதுடன், அதற்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடமும் பற்றைக் காடாகவும் காட்சியளிப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சு என்பனவற்றுடன், மேற்படி திட்டத்தினை முன்மொழிந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



பிற செய்திகள்