ராஜமணி பிரசாந்த், சுரேஷ் குமாரிடம் சர்ச்சைக்குரிய கட்டடம் தொடர்பில் விசாரணை

கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் மற்றும் முன்னாள் உப தலைவர் சுரேஷ் குமார் ஆகியோரை ஒழுக்காற்று விசாரணைகளுக்காக வருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பத்தனை பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய பத்தனை தொடர் வர்த்தக தொகுதி குறித்த முறைப்பாடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் இது தொடர்பான சட்ட ரீதியான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்தற்கமைய சர்ச்சைக்குரிய குறித்த கட்டடமானது அரச அனுமதியின்றி முறைக்கேடாக கட்டப்பட்டமை தெரியவந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் 8ஆம் திகதி சௌமியபவணில் இடம்பெறவுள்ள ஒழுக்காற்று விசாரணைக்கு கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் மற்றும் முன்னாள் உப தலைவர் சுரேஷ் குமார் ஆகியோரை முன்னிலையாகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சட்ட விரோதமாக கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய குறித்த கட்டடத்தை மாவட்ட செயலாளர் ஊடாக அரசுடைமையாக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் அறியப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *