ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஜனநாயகத்தை இல்லாமல் செய்ததாக தம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் யாப்பு திருத்தம் தொடர்பில் நேற்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியிலேயே நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச தரப்பினருடன் சிறந்த உறவை பேணியிருந்தோம்.
எனவே, தற்போது கட்சி தொடர்பில் சிலர் வெளியிடும் கருத்துகளுக்கு செவி சாய்க்க தேவையில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும், அங்குணகொலபெலெஸ்ஸ பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் மஹிந்த அமரவீர, நாட்டில் ஜனநாயகம் குறித்து கருத்து வெளியிடும் போது கட்சியிலும் ஜனநாயகம் காணப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
கடந்த தினத்தில் ஜனநாயகம் இல்லாமல் போனமையை நாம் கண்டிருந்தோம். ஜனநாயக தலைவராக கடமையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், கட்சியில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை விரைவில் மேற்கொள்வார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்