வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 35 வது நாள் போராட்டம் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தின் சிவசக்திபுரம் கிராமத்தில் வயல்வெளிகள் சூழ்ந்த சேனாவள்ளி குளத்திற்கு அருகில் இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் தம்பலகாமம் பிரதேசத்தினைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், மீனவ மற்றும் விவசாய சங்கத்தினர், செயற்பாட்டாளர் என 70 இற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனக் கோரி நடைபவணியாக வருகை தந்து சேனாவெளிக்குளக் கட்டில் கூடியிருந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
“தமிழ் அரசியல்வாதிகளே ஒன்று சேருங்கள், எமது காணி எமது உரிமை, கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும், போன்ற பதாகைகளை ஏந்தியவாறும் மாட்டு வண்டியிலும் பேரணியாக சென்று தங்களது அமைதியான போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அரசியல்வாதிகள் தங்களுக்கான உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வினை முன்வைக்க வேண்டும், எங்களது உரிமைகளை பெற்றுத் தாருங்கள், பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பல இன்னல்களை எதிர்நோக்குகிறோம் இதற்கான தீர்வை பெற்றுத்தருமாறும் விவசாய பூமியாக தம்பலகாமம் காணப்படுகிறது இனிமேலாவது இயற்கை உரம் கிருமி நாசினியை இலகுவாக பெற்றுத் தாருங்கள், விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் எனவும் வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஊடாக அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்தனர்.




பிற செய்திகள்