புதிய பிரேரணையில் பொறுப்புக்கூறலுக்கான விடயங்கள் மறைக்கப்படாமலும் மறக்கப்படாமலும் உள்ளடங்க வேண்டும்

புதிய பிரேரணையில் பொறுப்புக்கூறலுக்கான விடயங்கள் மறைக்கப்படாமலும் மறக்கப்படாமலும் உள்ளடங்க வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணையானது, பொறுப்புக்கூறலுக்கான விடயங்கள் மறைக்கப்படாலும், மறக்கப்படாமலும் இருப்பதற்கான உள்ளடக்கங்கள் இடம்பெற வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து இறுதியாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட 46.1 பிரேரணையின் காலம் இம்முறையுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் புதிய பிரேரணையொன்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளது.

இந்தப் பிரேரணையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் குறிப்பிடப்பட்ட விடயங்கள் நீடிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் மறைக்கப்படாலும் மறக்கப்படாலும் இருப்பதற்காக முக்கிய விடயங்களை உள்ளீர்க்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

முதலாவதாக, சாட்சியங்களை திரட்டுவதற்கான பொறிமுறை ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பொறிமுறை அடுத்த பிரேரணையிலும் உள்ளடக்கப்படுவதோடு, அதற்கான அங்கத்தவர்கள் முழுமைப்படுத்தப்பட்டு செயற்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலவரங்கள் பற்றி உயர்ஸ்தானிகரின் கண்காணிப்பு தொடரப்பட்டு பேரவைக்கு அறிக்கையிடப்பட வேண்டும் -என்றார்.

அத்தோடு, இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வேறெந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென வினவியபோது,

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் பற்றிக் காண்காணிப்பதற்காக விசேட அறிக்கையிடலாளர் ஒருவரையும் நியமிக்க முடியும்.

மேலும், மியமாரில் இடம்பெற்ற விடயங்கள் சம்பந்தமாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட விசேட நிபுணர்கள் அடங்கிய விசேட விசாரணைப் பொறிமுறையொன்றையும் உருவாக்க முடியும் -என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *