ஜெனீவா அமர்வில் என்ன நடக்கப்போகிறது – அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்

ஜெனிவா அமர்வில் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போதுவரை அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா திருவிழா செப்டெம்பர் 12ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது. திருவிழா தொடங்கும் ஆரம்ப நாட்களான 12ஆம், 13ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

2021 பெப்ரவரி – மார்ச் மாதங்களில் நடந்த 46ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 46.1 தீர்மானத்தின் கால வரம்பு இந்தக்கூட்டத்தொடரில் முடிவடைய இருப்பதனாலும், பயங்கரவாதத்தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தல், ஜனநாயகப் போராட்டங்கள் அடக்கப்படுதல் என்பவற்றினாலும் இலங்கை விவகாரத்தில் ஜெனிவா சற்றுசூடாக இருக்கும் எனவும் கருதப்படுகின்றது.

இந்தக்கூட்டத் தொடரில் இரண்டு விடயங்கள் மிகுந்த கவனிப்பிற்குரியதாகவிருக்கும். ஒன்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கை. இரண்டாவது பிரிட்டன் கொண்டு வரவிருக்கும் புதிய பிரேரணை. இந்த இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் தமிழ்த்தரப்பு மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது. இதில் மிகுந்த பொறுப்பு உண்டு என்பதை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் ஆதிக்கம் தான் ஜெனிவாவில் உள்ளது. அதன் உலகளாவிய நலன்களே ஜெனிவாவின் தீர்மானங்களாக மாறி விடுகின்றது. இந்தியா இலங்கையின் அயல்நாடாக, பிராந்திய வல்லரசாக இருப்பதனாலும் , இந்தோ-பசுபிக் மூலோபாயத்திட்டம் மேற்குலகத்தினதும் இந்தியாவினதும் கூட்டுத்திட்டமாக இருப்பதனாலும் இந்தியாவின் சம்மதத்தத்துடனேயே இலங்கை தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும்.

இதுவரை கால வரலாற்று அனுபவமும் அதனையே வெளிப்படுத்துகின்றது. சுருக்கமாகக் கூறின் இலங்கை தொடர்பாக இந்தியா – அமெரிக்கா கூட்டு நலன்களே ஜெனிவாவின் இலங்கை தொடர்பான தீர்மானங்களாக இருக்கும். இன்னோர் வகையில் கூறுவதாயின் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தினது பூகோள நலன்களினதும் , பிராந்திய வல்லரசான இந்தியாவினது புவிசார் அரசியல் நலன்களினதும் கூட்டுநலன்களே இலங்கை தொடர்பான தீர்மானங்களாக இருக்கும்.

இரண்டு தரப்புக்கும் இலங்கை தொடர்பாக உள்ள பொதுவான இலக்கு சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் இல்லாமல் செய்வது தான் அல்லது இயன்றவரை கீழிறக்குவது தான். எனவே சீனாவின் ஆதிக்கம் கீழிறங்கும் வரை ஜெனிவா கோவையை இவை மூடப்போவதில்லை என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *