புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டுப் பிரதேச சபைக்குட்பட்ட உடப்பு- புளிச்சாக்குளம் பிரதான வீதியின் நான்காம் வட்டாரம் பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குவதாக அப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அதாவது, அங்கீகரிக்ப்பபடாத இடங்களில் குப்பைகளை வீசுவது தண்டனைக்குரிய குற்றமாகும்” என அந்தப் பிரதேசத்தில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை மற்றும் உடப்பு பொலிஸ் என்பனவற்றினால் இணைந்து அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அங்கு இவ்வாறு குப்பை கொட்டப்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் மாத்திரமே இவ்வாறு கழிவுகள் உட்பட குப்பைகளை கொட்டுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அறிவுறுத்தல்களையும் மீறி இந்தப் பகுதியில் குப்பை போடப்பட்டுள்ளமையால் சுற்றாடல் மாசடைவதுடன், இந்தப் பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் உடப்பு – புளிச்சாக்குளம் பிரதான வீதியூடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே இந்த குப்பைகள் இவ்வாறு குப்பைகளை கொட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு முந்தல் பிரதேச செயலகம், உடப்பு பொலிஸார், மற்றும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுகினறனர்.
மேலும், இந்த விடயம் தொடர்பிர் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை தலைவர் கே.தட்சணாமூர்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு முன்னரும் குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டன.
அதன் பின்னர், அந்த இடத்தை எமது சபை ஊழியர்களை கொண்டு சுத்தப்படுத்தி தொடர்ந்தும் குப்பைகளை கொண்ட வேண்டாம் என்று அறிவித்தல் பலகை ஒன்றையும் காட்சிப்படுத்தினோம்.
எனினும், இரவு நேரங்களில்தான் குறித்த இடத்தில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருடனும் பேசியிருக்கிறேன்.
குப்பைகளை கொட்டும் இடத்தில் இரவு நேரங்களில் பொலிஸாரை பாதுகாப்பு பணியில் அமர்த்தி இதனை முடிவுக்கு கொண்டுவர ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸாரிடம் கோரியிருக்கிறேன்.
அது சாத்தியமாகாத பட்சத்தில் அந்த பகுதியில் பாதுகாப்பு கமராக்களை பொறுத்தி அந்த இடத்தை தொடர்ச்சியாக கண்காணிக்க எண்ணியிருக்கிறேன்.
மேலும், அந்த இடத்தில் குப்பைகளை கொட்டியவர்கள் தொடர்பில் ஆதாரபூர்வமாக தகவல் கிடைத்தால் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை தலைவர் கே.தட்சணாமூர்த்தி மேலும் தெரிவித்தார்.



பிற செய்திகள்