யாழில் பாண் 200 ரூபாய் மட்டுமே – உற்பத்தி செய்ய முடியாதவர்களுக்கு சொல்லித் தருகின்றோம் – பேக்கரி சங்கம் அழைப்பு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கோதுமை மா பிரச்சினையிலும் ,ஒரு றாத்தல் பாண் 200 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என யாழ் மாவட்ட வெதுப்பாக உரிமையாளர் சங்கத் தலைவர் கே. குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

பாண் விலை அதிகரிப்பு தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

எரிபொருள் பிரச்சினை ஆட்சியாளரை ஓட வைத்தது.அதிலிருந்து கோதுமை மாவுக்கு பிரச்சினை ஏற்பட்டது.அதனை அடுத்து நாம் பிரீமா நிறுவனத்துடன் கலந்துரையாடலை மேற்கொண்டு ,55 வீதமான மாவை பெற்றுக்கொண்டோம்.

அதன் பின்னர் தான் ,அந்த மாவை பயன்படுத்தி 200 ரூபாவுக்கு பாண் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பாணின் விலையை கூட்டினால் ,குறைப்பதற்கு பலர் பஞ்சிப்படுவார்கள்.இது கிராம மக்களை பெருமளவு பாதிக்கும்.எரிபொருள் பிரச்சினையால் நாடு எவ்வளவு அல்லல் பட்டதோ அதே போலத் தான் இந்தப் பாண் பிரச்சினையும் உள்ளது.

கொழும்பில் பாண் 300 ரூபா,யாழில் 200 ரூபா.இதற்கு அரசாங்கம் சந்தோசப்பட வேண்டும்.விலையை சடுதியாக அதிகரிக்கவேண்டிய அவசியம் இல்லை.

ஏன் என்றால் வெதுப்பகங்களுக்கு 12500 ரூபா வீதம் தான் மா வழங்கப்படுகிறது.

ஆனால் 22000 ரூபாவுக்கு மா பெற்றுகொள்ளுபவர்கள் பாண் விலை அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தலாம்.தயவு செய்து கறுப்புச் சந்தையை ஊக்குவிக்க வேண்டாம்.எமக்கு நியாமான விலையில் பிரீமா நிறுவனம் மா வழங்கி வருகிறது.அதற்கு நன்றி கூற வேண்டும்.

200 ரூபாவுக்கு பாணை விற்பனை செய்யுங்கள்.இல்லையென்றால் உங்களுடைய மாவை வாங்கி,இன்னுமொரு வெதுப்பகத்துக்கு கொடுத்து 200 ரூபாய்க்கு பானை விற்பனை செய்வோம்.நீங்கள் 10 ரூபா குறைந்தால் இன்னும் சந்தோசம்.

35000 ரூபாவுக்கு நீங்கள் மா பெற்றுக்கொண்டால் மாத்திரமே 300 ரூபாவுக்கு பாணை விற்பனை செய்யலாம்.200 ரூபாவுக்கு பாணை எப்படி உற்பத்தி செய்வது நாம் உங்களுக்கு சொல்லித் தருகின்றோம்.இது எமது தொழில்.புனிதமான தொழில்.மக்களுக்கு செய்யும் சேவையாக நாம் இதை செய்ய வேண்டும் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *