
நீண்டகால ஒரு அழிவைச் சந்தித்து தங்கள் வாழ்வினை முன்னெடுக்க முடியாமல் தத்தளிக்கும் எமது உறவுகள் நிம்மதியாக வாழக் கூடிய சூழலை இல்லாமல் செய்யும் விடயமாகவே இந்த இல்மனைட் அகழ்வு விடயம் அமையும்.
திருக்கோவில் மக்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் எந்த செயற்பாட்டினையும் மேற்கொள்ள நாம் இடமளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
இன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது திருக்கோவில் பிரதேசத்தை அழிக்கின்ற நோக்கோடு முன்னெடுக்கப்பட இருக்கின்ற இல்மனைட் தாதுப் பொருள் அகழ்வு தொடர்பில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினாம்.
திருக்கோவில் பிரதேசம் கடலை அண்டிய மிகவும் வருமானம் குறைந்த குடும்பங்களைக் கொண்ட பிரதேசம். இங்கு இல்மனைட் என்று சொல்லப்படுகின்ற தாதுப்பொருள் அகழ்வினை முன்னெடுப்பதற்குரிய பணிகளை சுமார் 7 வருடங்களாக குறித்த நிறுவனங்கள் மேற்கொள்கின்ற போது பிரதேச மக்களும் அரசியல்வாதிகளும் காட்டிய எதிர்ப்பின் காரணமாகத் தடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது இச் செயற்பட்டினை ஆரம்பிப்பதற்குரிய பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அறியக் கிடைத்தது.
இது தொடர்பில் எமது மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டியது எமது கடப்பாடாகும்.
ஒரு பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர் ஆகியோர் இருக்கின்ற நிலையில் இதற்கு மாறாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திலே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த இல்மனைட அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக நாங்கள் அறிகின்றோம்.
இவ்வாறான செயற்பாடுகளை நாங்களும் எமது மக்களும் எதிர்க்கின்றோம். குறிப்பாக இந்த பிரதேசம் கடந்த காலங்களில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு பயன்தருகின்ற பல மரங்கள் கூட அழிவுற்று எமது ஆலயங்கள் மக்களின் வீடுகள் எல்லாம் கடலால் சூழப்படுகின்ற இந்த நிலையிலே இவ்வாறான இல்மனைட் தாதுப் பொருள் அகழ்வு இடம்பெற்றால் எமது இந்தப் பிரதேசத்திற்கு மிகவும் பாரிய அழிவு ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நீண்டகால ஒரு அழிவைச் சந்தித்து இந்தப் பிரதேசத்தலே தங்கள் வாழ்வினை முன்னெடுக்க முடியாமல் தத்தளிக்கும் எமது உறவுகள் சுதந்திரமாக நிம்மதியாக வாழக் கூடிய ஒரு சூழலை இல்லாம் செய்யும் விடயமாகவே இந்த இல்மனைட் அகழ்வு விடயம் அமையும்.
இந்த அடிப்படையில் எமது பிரதேசத்தில் இவ்வாறான தாதுப் பொருள் அகழ்வை நாங்கள் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம்.
இதன் விளைவாக எமது மக்களின் வாழ்வாதாரமாக மேற்கொள்ளப்படுகின்ற மேட்டுநிலப் பயிர்ச்செய்கை கூட பாதிக்கப்படும். குறிப்பாக இவ்வாறான அகழ்வுகள் நடைபெறுகின்ற போது நிலக்கீழ் நீர் உவர் நீராக மாற்றம் பெற்று எமது மக்கள் குடிநீருக்குக் கூட அவதியுற்று நோய்வாய்ப்படும் அச்சுறுத்தலும் எதிர்காலத்தில இடம்பெற வாய்ப்புண்டு.
இந்த அடிப்படையில் எங்களுயை இந்தப் பிரதேசத்தில் இவ்வாறான அகழ்வு மேற்கொள்ளப்படுவதை நாங்கள் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம். இது ஒரு அத்தியாவசிமற்ற விடயமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இன்று இந்தியாவில் கூட இவ்வாறு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பிரதேச மக்கள் புற்றுநோய்க்கு உள்ளாக்கப்பட்டு அப்பிரதேச மக்கள் ஆரோக்கியமற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதையும் நாங்கள் படித்திருக்கின்றோம்.
எனவே எமது பிரரேசத்தில் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். எமது மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு உதவிகளைச் செய்வதைத் தவிர்த்து அவர்களை அழிப்பதற்குரிய விடயங்களைக் கையாள்வதாகவே இதனை நாங்கள் கருதுகின்றோம்.
இதனைத தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் பல முயற்சிகளை எடுத்திருக்கின்றோம். 2021ம் ஆண்டு இந்த விடயம் தொடர்பில் அமைச்சருடான கலந்துரையாடலின் போது ஒலுவில் துறைமுகம் இருந்து பொத்துவில் வரையான பிரதேசத்தை மையமாக வைத்து இந்த இல்மனைட் அகழ்வு நடவடிககையை மேற்கொள்வதற்குரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் எடுத்துக் கூறியருந்தோம்.
இதன்போது எமது கிராமங்களில் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க மாட்டோம் என்றும் குறிப்பாக மக்களைப் பாதிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள மாட்டோம் என்றும் அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
அதன் பிற்பாடு தற்போது அவசர அவசரமாக இவ்விடயங்கள் மீண்டும் முன்னெடுப்பதாகவும், நடவடிக்கைகள் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நாங்கள் அறிகின்றோம்.
இப்பிரதேசத்தில் இருக்கும் அதிகாரிகள், அரசியல் ரீதியான மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையெல்லாம் உதாசீனம் செய்து விட்டு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதென்பது மிகவும் மோசமானதொரு செயற்பாடு. இதனை முற்றுமழுதாக நாங்கள் எதிர்ப்போம்.
எமது மக்களின் நலனுக்காக இந்தக் களத்திலே நிற்போம். இந்த விடயங்களுக்குக் குறிப்பிட்ட சிலர் ஒத்துழைப் வழங்குவதாகவும் நாங்கள் அறிகின்றோம். அவ்வாறு அவர்கள் செய்வதாயின் நேரடியாக மக்களுக்கு அதனைத் தெரியப்படுத்த வேண்டும்.
மக்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் எந்த செயற்பாட்டினையும் மேற்கொள்ள நாம் இடமளிக்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.