ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு, ‘இலங்கையில் ஜனநாயகத்துக்கான சர்வதேச வலையமைப்பு’ திறந்த மடல் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்தக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜனநாயக விரோதச் சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து 90 நாள் தடுப்புக் காவலில் வைத்திருப்பது இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை மீறும் செயலாகும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஹஷான் ஜிவந்த குணதிலக்க மற்றும் வணக்கத்திற்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகிய மூவரும் ஆகஸ்ட் 22ஆம் திகதி முதல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 3,500க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 1,500க்கும் மேற்பட்டோர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விவேகமற்ற எதேச்சதிகாரக் கொள்கைகள் மூலம் இலங்கையை முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ஆட்சியாளர்களுக்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்த அமைதியான அகிம்சைப் போராட்டத்தை அழிக்க முற்பட்டதற்கு ராஜபக்ஷ குடும்ப ஆட்சி நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.
மே மாதம் 9 ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கம்புகளை எடுத்துச் சென்ற குண்டர்கள் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஆயுதமேந்திய இராணுவ வீரர்களை தூண்டினர்.
எவ்வாறாயினும், அந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் எந்தவித சாதகமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து தடியடியுடன் வந்து நிராயுதபாணியான எதிர்ப்பாளர் மீது தாக்குதல் நடத்திய எவரும் தடுத்து வைக்கப்படவில்லை.
இலங்கையில் ஜனநாயகத்திற்கான சர்வதேச வலையமைப்பு எந்தவொரு வன்முறைச் செயலையும் மன்னிக்கவில்லை. அரசாங்க உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறைகள் அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிரான தன்னியல்பான தாக்குதல்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட வன்முறையைத் தூண்டிய அனைவருக்கும் எதிராகச் சட்டத்தை சமமாகப் பிரயோகிக்க, ஜனநாயக உரிமையான, கருத்து வேறுபாடுகளை ஒடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம் என இலங்கை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் 51 ஆவது அமர்வில் இந்த விடயத்தை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ‘இலங்கையில் ஜனநாயகத்திற்கான சர்வதேச வலையமைப்பு’ கோருகின்றது.
இலங்கையுடனான அனைத்து இராஜதந்திர ஈடுபாடுகளிலும், இலங்கையின் ஜனநாயகத்திற்கான சர்வதேச வலையமைப்பு, கருத்து வேறுபாடு, கருத்துச் சுதந்திரம் மற்றும் சங்கமச் சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்துவதுடன், அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை கண்டிக்கப்பட வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்துகிறது.
பிற செய்திகள்