வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பான முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
மேலும், கொழும்பு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, ரிசாத் பதியூதீன் முன்வைத்திருந்த மேன்முறையீட்டு மனு இன்று(5) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
ரிசாத் பதியூதீன், வில்பத்து வனாந்தரப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு அதிகமாக பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியை அழித்துள்ளார்.
இதன் காரணமாக அப்பிரதேசங்களில் அவர் சொந்தச் செலவில் மரம் நடுகை மேற்கொண்டு அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என்றும் கொழும்பு உயர்நீதிமன்றம் ரிசாத் பதியூதீனுக்கு கடந்த 2021ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.
அதற்கு எதிராக ரிசாத் பதியூதீன் முன்வைத்திருந்த மேன்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது காமினி அமரசேகர, அர்ஜுன ஒபேசேகர மற்றும் அசல வெல்லப்புலி ஆகிய நீதிபதிகள் மனு மீதான விசாரணைக்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் இந்த விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணையின் போது நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணை நடைபெற்றிருந்த காரணத்தினால் அவர் உச்சநீதிமன்ற மனு விசாரணையில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம், அடுத்த வருடம் ஜனவரி மாதம் 19ம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளது.
பிற செய்திகள்