
கொழும்பு, செப். 7: 70 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் உடனடியாக ஈடுபடவுள்ளதாக இலங்கை தோட்ட பணியாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் நிஷாந்த வன்னியாராச்சி, சம்பள அதிகரிப்பு தொடர்பில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பல கட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இதன்போது குறைந்தபட்ச ஊதியத்தில் இருந்து 70வீத உயர்வு கோரப்பட்டது. ஆனால், எமது கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக்கொள்ளவில்லை. பல தோட்ட நிறுவனங்கள், கோடிக்கணக்கான லாபம் ஈட்டுகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் தமது உண்மையான லாப நட்ட கணக்குகளை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்துவதில்லை.
இந்தநிலையில் அடுத்த வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்போது, 70வீத சம்பள உயர்வு வழங்காவிட்டால், நாடு தழுவிய தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தோட்ட பணியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.