
கொழும்பு, செப் 7
ராஜபக்சக்களின் அரசியல் வகிபாகம் நாட்டுக்கு தேவை என்ற நிலைப்பாட்டிலேயே பெரும்பாலான இலங்கையர்கள் இன்றும் உள்ளனர். எனவே, ராஜபக்சக்கள் பதவி விலகி இருக்ககூடாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ராஜபக்சக்கள் தாம் வகித்த பதவிகளில் இருந்து விலகியது தவறு என்பதே நான் உட்பட எமது கட்சியில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 லட்சம் பேர் வாக்களித்தனர். அவரை நீக்கும் அதிகாரம் அந்த மக்களுக்கே உள்ளது. மாறாக வீதிக்கு இறக்கும் சுமார் ஒரு லட்சம் பேரால் அதை செய்ய முடியாது.
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தது. எனவே, அவர் பதவி விலகியதும் தவறு. இந்நாட்டில் மக்கள் ஆசியுடன்தான் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். பலவந்தமாக வந்ததில்லை. எமது கட்சி மக்களுடன்தான் உள்ளது. நாம் மக்கள் மத்தியில் செல்வோம்.
ராஜபக்சக்களின் தேசிய அரசியல் அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே பெரும்பாலான மக்கள் உள்ளனர். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் பேச்சு நடத்தினோம். அரசியல் பற்றி பேசவில்லை. ஆனாலும் அரசியலுக்கு வரும் எண்ணத்துடன் அவர் இல்லை என்றார்.