இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6 துவிச்சக்கர வண்டிகள் உட்பட திருடப்பட்ட பொருட்களுடன் மொல்காவே சாமியா என அழைக்கப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் புலத்சிங்கள பொலிஸ் பிரிவில் பதிவாகிய பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 6 துவிச்சக்கர வண்டிகள், ஒரு தண்ணீர் மோட்டார், இரண்டு வீட்டு எரிவாயு சிலிண்டர்கள், ஒரு ஏர் கம்ப்ரஸர், ஒரு வாகன பேட்டரி மற்றும் ரப்பர் சீட்கள் ஒரு கையிருப்பு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
ஹெரோயின் பாவனைக்கு கடும் அடிமையான சந்தேகநபர் இரவு வேளைகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், சந்தேகநபர் 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் உட்பட 14 திருட்டுகளுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திருடப்பட்ட அனைத்து பொருட்களையும் புலத்சிங்கள, பதுரலிய பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்று, அந்த பணத்தை சூதாட்டத்திற்கும் ஹெரோயின் கொள்வனவிற்கும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் மொல்காவா பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்.
அவர் களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, சம்பவம் தொடர்பில் புலத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்