ரணில் மீது குற்றம் சுமத்தும் சர்வதேச அமைப்பு!

ரணில் விக்கிரமசிங்கவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அல்லது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் உறுதியளிக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று 37 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதில் ஏற்கனவே குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களும் உள்ளடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும்,ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் கடுமையான உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்று கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஆயுதமேந்திய பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார் ,அவர் அரசு சார்பு ஆயுதக் குழுவில் சேர்ந்தார். அது கடத்தல் மற்றும் சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பொறுப்பாக இருந்தது.

2021 ஜனவரியில் இலங்கையின் சட்டமா அதிபர் 2005 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொலை செய்தமை தொடர்பாக பிள்ளையானுக்கு எதிரான குற்றச்சாட்டை கைவிட்டார்.

தற்போது கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார் என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட மற்றொரு அமைச்சர் லொஹான் ரத்வத்தே ஆவார்இ இவர் துப்பாக்கி முனையில் கைதிகளை மிரட்டியதையடுத்து 2021 செப்டம்பரில் சிறைத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
அவர் இப்போது பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கிறார்.

மேலும்,புதிய நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சரான சனத் நிஷாந்த, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பாத்திரத்திற்காக தற்போது காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மே 9 அன்று, கொழும்பில் நடைபெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் தாக்கினர்.

சம்பவம் தொடர்பில் மே 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிஷாந்த, ஒரு மாதத்தின் பின்னர் பிணையில் அனுமதிக்கப்பட்டார்.

இலங்கையில், பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, பொருளாதார முறைகேடு, ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இறுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும் ஜூலை மாதம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க, எதிர்ப்பாளர்களை வலுக்கட்டாயமாக கலைக்க இராணுவத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏராளமானவர்களைக் கைது செய்ததன் மூலம் கடுமையான ஒடுக்குமுறையை ஆரம்பித்தார்.

அவர், கொடூரமான மற்றும் மதிப்பிழந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பை வெளியிடும் தலைவர்களை எந்தக் குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைக்கிறார்.

இந்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த புதிய தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், மோசமான அமைச்சு நியமனங்கள் மற்றும் அமைதியான எதிர்ப்புக்களுக்கு அதன் கடுமையான பிரதிபலிப்பு, இலங்கையின் உரிமைகள் நிலைமை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கோரியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *