வவு, செப் 9
வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்துக்குள் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் மோதல் காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளது.
வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் கடந்த 10 தினங்களாக வருடாந்த திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று (08) மாலை திருவிழாவின்போது ஆலயத்தில் நின்ற சிலருக்கும் ஆலய பகுதிக்கு வந்த பிறிதொரு குழுவினருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று (09) ஆலயத்தில் கொடி இறக்குவதற்கான பூஜைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த குழுவினருக்கும், ஆலயத்தில் நின்றவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதுடன், வாள் வெட்டுத் தாக்குதல்களும் இடம்பெற்றன. இச் சம்பவத்தில் காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆலய நிர்வாகனத்தினர் உட்பட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கலாக சுமார் 20 பேர் நெளுக்குளம் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியிலிருந்து பொலிஸாரால் வாள்களும் மீட்கப்பட்டன.

இதேவேளை, ஆலய தலைவரை விடுவித்த பின்னரே ஆலயத்தின் கொடி இறக்கப்படும் எனத் தெரிவித்து அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்துக்கு முன் திரண்டு காணப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நெளுக்குளம் பொலிஸார் இதன்போது தெரிவித்துள்ளனர்.