கடன் வாங்கி அழிக்கப்பட்ட தமிழ் இனத்தை நோக்கியே அரசு இப்போது கைநீட்டுகிறது! குரலற்றவர்களின் குரல் அமைப்பு

எங்களுடைய தமிழ் இனத்தை அழிப்பதற்காக வாங்கப்பட்ட கடன் தான் இப்போது இந்த நாடு பொருளாதார நெருக்கடியை சந்திப்பதற்கான காரணம். ஆனால், அழிக்கப்பட்ட இனத்தை நோக்கியே கைநீட்டப்பட்டுகின்றது என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை சந்திக்கும் பயணம் தொடர்பில் அரசியல் கைதிகள் விடுதலைக்கான அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்களின் ஊடக சந்திப்பு யாழில் இன்று இடம்பெற்றது.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளான எமது உறவுகளை தேடி சிறைச்சாலை வாசலுக்கு சென்று பார்வையிடுவதற்கான சூழல் தற்போது நிலவியிருக்கின்றது.

அதாவது, தேசியக் கைதிகள் தினத்தினை முன்னிட்டு வருடந்தோறும் கைதிகளை நேரில் சென்று பார்வையிடுவதற்கான ஒழுங்குகள் சிறைச்சாலை நிர்வாகத்தால் ஒழுங்கு செய்யப்படுவது வழமை.

கடந்த கால அசாதாரண சூழ்நிலைகளால், அதாவது 4 ஆண்டுகளுக்கு பின் உறவுகளை நேரில் சென்று பார்வையிடுவதற்கான சூழல் கிடைத்திருக்கின்றது.

இந்தப் பயணம் நிறைவானதாக இருக்க வேண்டும். அடுத்த வருடத்தில் அரசியல் கைதிகள், வீடுகளில் தமது குடும்பத்துடன் ஒன்றாக இருக்க வேண்டிய சூழல் நிலவ வேண்டும்.

ஜெனிவா கூட்டத்தொடரில் புதிதாக வரும் அரசாங்கங்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் பேசப்படுவது வழமை. தற்போதும் அதுவே இடம்பெறுகிறது.

நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடி. அதேநேரம் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு பலரிடம் கையேந்தும் அரசாங்கம். அந்தவகையில் எங்களுடைய தமிழ் இனத்தை அழிப்பதற்காக வாங்கப்பட்ட கடன் தான் இப்போது இந்த நாடு பொருளாதார நெருக்கடியை சந்திப்பதற்கான காரணம்.

ஆனால், அழிக்கப்பட்ட இனத்தை நோக்கியே கைநீட்டப்பட்டிருக்கின்றது. தமிழ் புலம்பெயர் உறவுகள், அமைப்புக்களிடமே இந்த அரசாங்கம் கைநீட்டியிருக்கின்றது. அதேநேரம் உலக நாடுகளிடமும் வேண்டி நிற்கின்றார்கள்.

இலங்கைக்கு உதவி செய்கின்ற எந்த நாடுகளோ, அமைப்புக்களோ நிபந்தனை அடிப்படையில் உதவி செய்ய வேண்டும். முதலாவதாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

ஆகவே, சிறைச்சாலைக்குச் சென்று உறவுகளோடு உறவாடுவதற்னாக ஒழுங்குகளை குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் செய்துள்ளோம். எங்களுடைய இந்தப் பயணம் மதத்தலைவர்களின் ஆசியோடும்இ அரசியல் பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடும் நடக்கவிருக்கின்றது.

கைதிகளை பார்வையிடுவதற்கு, பெற்றோர்கள் சென்று வருவதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை கனேடிய தமிழர் பேரவை அமைப்பு செய்துள்ளது.

அதனை யாழ். மாநகர சபையின் முதல்வர் வி. மணிவன்னண் ஊடக உறுப்பினர் பார்த்தீபன் ஒழுங்கு செய்திருக்கின்றார்.

அதேநேரம், இந்த ஒருங்கிணைந்த வேலைகளை, ஒழுங்குபடுத்திய யாழ். ஊடக அமையத்திற்கும் கிளிநொச்சி, வவுனியா ஊடக அமையத்திற்கும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு சார்பாகவும், பாதிக்கப்பட்ட உறவுகள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *