ஈஸ்டர் தாக்குதல் மூலம் நாட்டுக்குள் ஊடுருவிய இஸ்லாமிய தீவிரவாதம்; கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினர்!

ஈஸ்டர் தாக்குதல் மூலம் இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுருவி விட்டதாக தெரிவித்து படையினர் கூலிக்கு அமர்த்தப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.

அவ்வாறு அமர்த்தப்பட்ட படையினரை இந்த நாட்டின் உளவுத்துறையே பயன்படுத்தியதா என்கிற பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்யக்கோரி யாழில் நேற்று ஆரம்பமான கையெழுத்து சேகரிக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறியுள்ளார்.

40 வருடங்களுக்கு மேலாக நீதி நியாயத்தை எதிர்பார்த்து போராடிய அனைத்து தரப்புகளுமே பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளபோதும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் எதையும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களையும் அடக்குவதற்காகவும் அண்மையில் நடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலை நியாயப்படுத்துவதற்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அப்பாவி இளைஞர்கள் தண்டிக்கப்படுவதும் நிரபராதிகள் கொல்லப்படுவதற்கும் இந்த சட்டம் வழிகோலுவதாக தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம், இந்த கொடிய சட்டம் மிகவிரைவில் சட்ட புத்தகத்திலிருந்து அகற்றப்படும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *