புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு கிடைத்துள்ள டொலர்!

2022ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் 16 சதவீதமாக அதிகரித்து 325 மில்லியன் டொலர்களை கடந்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜூலை மாதத்தில் 279 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய தொகை ஆகஸ்ட் மாதத்திற்குள் 46 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து 325 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது, வெளிநாட்டு ஊழியர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டுச் செலாவணி மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துள்ள ஊழியர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 16.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே சட்டரீதியாக வங்கி முறை மூலம் பணம் அனுப்பிய ஒவ்வொரு புலம்பெயர்ந்த தொழிலாளிக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடு அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்நோக்கும் இந்த நேரத்தில் அனைத்து இலங்கையர்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆதரவு தேவை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளியேறுவதற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 200,000 ஐ கடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு 300,000 தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்ப இலக்கு இருந்த நிலையில், வெளிநாடுகளில் தொழிலாளர்களின் தேவை அதிகரிப்பு காரணமாக இந்த இலக்கு 330,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *