நிரந்தரமான அரசியல் தீர்வை வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம்!

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 43 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், மல்லிகைத்தீவு பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இப் போராட்டமானது திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து தமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் என வலியுறுத்தினர்.

குறித்த நிகழ்வில் கிராம மட்ட அமைப்புகள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்த செயல் திட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களால் 100 நாள் செயற்திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டதுடன், வருகை தந்த பொது மக்களுக்கு அரசியல் தீர்வு திட்டம் மற்றும் 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பான சாதக பாதக விளைவுகள் தொடர்பாக தெளிவுபடுத்தலும் மேற்கொள்ளப்பட்டது.

அதே நேரம் அரசியல் தீர்வு விடயத்தில் மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் உள் வாங்கப்பட்டது.

குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *