இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணம் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று அந்த பெறுபேற்றை மாற்றமடையாமல் நிலைநிறுத்துவதற்கான விசேட கலந்துரையாடலொன்று (12) திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் த அனுராதா தலைமையில் நடைபெற்றது.
இதற்காக கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 17 கல்வி வலயங்களின் வலயக் கல்வி பணிப்பாளர்கள் அழைக்கப்பட்டனர்.
இங்கு மாகாண கல்வியமைச்சு இதுவரையில் மாகாணத்தின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் தெரிவித்தார்.
மேலும், மாகாண ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் முன்னேற்ற மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர், கலந்துகொண்ட பிராந்திய கல்விப் பணிப்பாளர்களின் பணியைப் பாராட்டி ஆளுநரால் பாராட்டுக் கடிதங்களும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண கல்வி செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பிற செய்திகள்