கோணேஸ்வரர் ஆலய விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி உறுதி

கொழும்பு, செப். 12: வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் ஆலயத்தின் புனிதத்தினை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதான செய்திகள் தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ” கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் ஆலயத்தின் புனிதத்தினை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரவைக் கூட்டத்தில் பிரஸ்தாபித்தேன். எந்தவொரு மதத்தினரின் உணர்வுகளையும் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினேன். குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே பத்திரிகை செய்தி மூலம் அறிந்திருந்தாகவும், அதுதொடர்பாக நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார் என்றார்.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மதவிவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சரும் இணைந்து திருகோணமலைக்கான களவிஜயத்தினை மேற்கொண்டு நிலமைகளை நேரடியாக ஆராய்வதுடன் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *