பளையில் காணிகளை ராணுவத்துக்கு வழங்குவதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை: டக்ளஸ் மறுப்பு

கொழும்பு, செப். 13: பளை பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக் குழுவிற்கு சொந்தமான காணிகளை இராணுவத்திற்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் மத்தியில் உணர்வு ரீதியான குழப்பங்களை ஏற்படுத்தி சுயலாப அரசியல் ஆதாயம் தேடும் தரப்புக்களினால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற இவ்வாறான செய்திகள் தொடர்பாக ஊடகங்கள் கவனமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது

” பளை பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக் குழுவிற்கு சொந்தமான காணிகளை இராணுவத்திற்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா வினவினார். அப்போது, துறைசார்ந்த அமைச்சர்களுக்கு இதுதொடர்பான எந்தவொரு திட்டங்களும் இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
அத்துடன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பளை பிரதேசத்தில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக் குழுவிற்கு சொந்தமான காணிகளை கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களை சேர்ந்த காணிகளற்ற மக்களுக்கும், காணாமல் போனவர்களின் நேரடி உறவினர்களில் காணிகள் அற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *