
சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு புதிய மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடச் சென்ற அவர்களது உறவினர்களை, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஆடைகளைக் களைந்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது எதிர்ப்பு வெளியிட்டவர்களிடம், ‘இது சிங்கள நாடு, நாம் இவ்வாறுதான் செய்வோம், என்று மிரட்டல்
பெண்களின்…
தொனியில் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 5 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை சந்திப்பதற்கு வருடத்துக்கு ஒரு முறை அனுமதி வழங்கப்படும். இதன்போது சிறைக்கைதிகளுடன் அருகிலிருந்து உரையாட முடியும். அதற்கு அமைவாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திப்பதற்கு அவர்களின் உறவினர்கள் நேற்றுமுன்தினம் சென்றிருந்தனர்.
இவ்வாறு சென்ற பெண்களை, விசேட அதிரடிப் படை பெண் அதிகாரிகள் தனித் தனியாக உடற்சோதனை மேற்கொண்டுள்ளனர். இதன்போது அவர்களின் ஆடைகளை களையுமாறு மிரட்டினர். சிலரை அரைநிர்வாணமாக்கியும், சிலரை உள்ளாடைகளுடனும் சோதனை மேற்கொண்டதுடன் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டவர்களை
அச்சுறுத்தும் வகையில், ’இது சிங்கள நாடு, நாம் இப்படித்தான் செய்வோம்’ என்றும் கூறியுள்ளனர்.
இதனால் கவலையடைந்த உறவுகள் சிலர், தமக்கு நடந்தவற்றை கைதிகளிடம் தெரிவித்துள்ளனர். கைதியாக உள்ள தந்தை ஒருவர், தனது மகளுக்கு நடந்த சம்பவம் குறித்து சிறைச்சாலை அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.
‘கடந்த பல வருடங்களாக நாம் எமது உறவுகளைப் பார்வையிடுவதற்கு இங்கு வந்து போகிறோம். ஆனால் கடந்த காலங்களில் இவ்வாறான உடற்சோதனை முன்னெடுக்கப்படவில்லை. எம்மை அச்சமூட்டி அச்சுறுத்துவதற்காகவே அரைநிர்வாணமாகச் சோதனை செய்தனர். நாம் அதற்கு எதிராக கதைத்தால் சிறையில் உள்ள எமது உறவுகளுக்கு ஏதும் பிரச்சினையாகிவிடுமோ அல்லது எமது உறவுகளைப் பார்க்க அனுமதிக்க மாட்டார்களோ என்ற பயத்தில் அமைதியாக இந்த சித்திரவதையை சகித்துக்கொண்டு இருந்தோம்’ என கைதிகளின் உறவினர் ஒருவர் தெரிவித்தார். (அ= ஒ,7)