
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கொள்வனவுக்காக சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் டொலரை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சராவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு எதிர்கொண்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு நகர மறுமலர்ச்சி வேலைத்திட்டத்திலிருந்து 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மண்சரிவு இடர்களை குறைப்பதற்கான வேலைத்திட்டத்திலிருந்து சுகாதார அமைச்சின் தேவைகளுக்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.– என்றார்