
பலாங்கொடை, செப் 14
பலாங்கொடை நகரசபை உறுப்பினர் ஒருவர் இன்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் கூரிய கத்தியை காட்டியதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய உறுப்பினரும், முன்னாள் தலைவருமான இவர் சற்றுநேரம் சபையில் காத்திருந்து விட்டு வெளியேறும் போது தான் உடுத்தியிருந்த சாரத்தில் மறைத்து காலில் கட்டி வைத்திருந்த கூரிய கத்தியை காட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பலாங்கொடை நகரசபை உறுப்பினர் (ஐக்கிய தேசியக் கட்சி) திருமதி சுனேத்ரா டி.வீரசிங்க, இவ்வாறான உறுப்பினர்கள் ஆயுதங்களை ஏந்தியவாறு சபைக்குள் வருவது சபையில் உள்ள அனைவரின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தலாகும் என்றார் .
பலாங்கொடை நகரசபை உறுப்பினர் செல்வி எம்.சந்திரலதா (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) சபையில் தெரிவிகையில் : ஆயுதங்களைக் கொண்டு வரும் உறுப்பினர்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார் .
பலாங்கொடை நகரசபையின் முன்னாள் தலைவரின் நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாக அவைத் தலைவர் வசந்தகுமார குணரத்ன தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு உறுப்பினரதும் பாதுகாப்பை உறுதி படுத்துவது எனது பொறுப்பு என்றும் அவர் கூறினார்.