ஆரம்ப பாடசாலை மாணவர்களின் போஷாக்குக்கு 27 மில்லியன் டொலர்கள்

கொழும்பு,செப் 14

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, உணவுப் பற்றாக்குறை போன்றவற்றால் பாடசாலை செல்லும் மாணவர்களின் ஊட்டச்சத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கவனத்திற்க் கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளில் பாடசாலை மாணவர்களுக்கான ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த 27 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் தேசிய உணவு ஊக்குவிப்பு சபை என்பன இணைந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு ஊட்டச் சத்துள்ள மதிய உணவை வழங்கத் திட்டமிட்டுள்ளன.

விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று விவசாய அமைச்சில் அமைச்சின் அதிகாரிகள், சுகாதார மற்றும் கல்வி அமைச்சுக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க மதிய உணவாக போலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும். அதன்படி, ஒரு பாடசாலை குழந்தைக்கு ஒரு நாளைக்கு 75 கிராம் அரிசி சாப்பாடு வழங்கப்படும்.

இந்த அரிசி உணவு வழங்கப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் நாளொன்றுக்கு ஒரு முட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துரையாடலில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் போசாக்கு உணவுக்கு நாளொன்றுக்கு தேவையான அரிசியின் அளவு 82 மெட்ரிக் தொன் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அந்த அரிசியை வழங்க அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *