திலீபனுடன் முதலாம் நாள் (15.09.1987)

15.09.1987 காலை மணி 8.30! தமி­ழீ­ழப் போராட்ட வர­லாற்­றிலே வைரத் தூரிகை கொண்டு பொன் எழுத்­துக்­க­ளால் பொறிக்­கப்­பட வேண்­டியநாள். ஆம்! தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் அர­சி­யல் பிரி­வுப் பொறுப்­பா­ள­ரும், தமி­ழி­னத்­தின் விடி­வெள்­ளி­யு­மா­கிய திலீ­பன் (இரா­சையா பார்த்தீ­பன்) நல்­லூர் வடக்கு வீதி­யி­லுள்ள கந்­தன் கருணை இல்­லத்­தில் வாக்­கி­டோக்கியுடன் நடு­வ­ராந்­தா­வில் அமர்ந்து கொண்டு புன்­னகை தவ­ழும் முகத்­து­டன், நண்­பர்­க­ளு­டன் அள­வ­ளா­விக் கொண்­டி­ருக்­கி­றார்.

சொர்­ணம், அன்­ரன் மாஸ்­டர், கவி­ஞர் காசி ஆனந்­தன் போன்­றோர் அங்கு இருக்­கின்­றார்­கள்.

அவரை நோக்கி நடக்­கி­றேன்… ஹலோ மு.வே.யோ… என்ற இனிய பலாச்­சு­ளைக் குரல் என்னை வர­வேற்­கி­றது. திலீ­பன் இப்­ப­டித்­தான் என்னை அழைப்­பது வழக்­கம். அவ­ர­ருகே சென்­ற­போது பக்­கத்­தில் அம­ரும்­படி என் தோளைக் கட்­டி­ய­ணைத்­த­வாறு கூறி­னார். கிட்டு அண்­ணா­வுக்கே உரிய இந்த பழக்­கம் அவர் உரு­வாக்­கிய திலீ­ப­னுக்­கும் இருந்­தது.

யாழ். மாவட்­டத்­தி­லுள்ள ஊரெழு என்­னும் அழ­கிய பனை­ம­ரங்­கள் கொஞ்சி விளை­யா­டும் கிரா­மத்­தில், ஆசி­ரி­யர் இரா­சையா தம்­ப­தி­க­ளின் கடைசி (நாலா­வது) மக­னா­கப் பிறந்த (திலீ­பன்) பார்த்தீபன் வாழ்­வின் ஆரம்­பத்­தி­லேயே மிக­வும் துர்ப்­பாக்­கி­ய­சா­லி­யாக இருந்­து­விட்­டான். பத்து மாதம் வரை அன்­புப்­பால் ஊட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்த அன்­னை­யின் அர­வ­ணைப்­பை பத்­தா­வது மாத முடி­வில் பறி­கொ­டுத்­து­விட்­டான் திலீ­பன்.

எத்­தனை கொடுமை இது? உற­வி­னர்­க­ளின் அர­வ­ணைப்­பில் வளர்ந்த பார்த்தீ­பன், தன் ஆரம்­பக்­கல்­வியை ஊரெ­ழு­வி­லும், பின்னர் யாழ். இந்­துக் கல்­லூ­ரி­யி­லும் கற்­றான்.
1974ஆம் ஆண்டு தை மாதம் யாழ்.நக­ரில் நடை­பெற்ற 2ஆம் உல­கத் தமி­ழ­ராய்ச்சி மாநாட்­டில் மிக­வும் ஆர்­வத்­து­டன் கலந்­து­கொண்­டான். ஆனால், தமி­ழி­னத்­தின் துரோகி ஒரு­வ­னின் கட்­ட­ளை­யின் மூலம் பத்து அப்­பா­வித் தமி­ழர்­கள் அவன் கண்முன்­னால் கொல்­லப்­பட்­ட­தைக் கண்டு பார்த்தீ­ப­னின் இத­யம் துடி­து­டித்­தது. தமி­ழன் சுதந்­தி­ர­மாக வாழவேண்­டு­மென்ற விடு­த­லைத்­தா­கம் அந்தச் சிறுவய­தில் (10 வயது) அவன் நெஞ்­சில் நெருப்­பா­கப் பற்­றத் தொடங்­கி­யது. 1977ஆம் ஆண்டு இலங்­கை­யில் நடை­பெற்ற இனக்­க­ல­
வ­ரத்­தில் யாழ்ப்­பா­ணம் நோக்­கி­வந்த தமிழ் அக­தி­க­ளுக்கு தன்­னால் முடிந்த உத­வி­க­ளைச் செய்­தான். அப்­போது அவ­னுக்கு வயது 13, அந்த இனக்கல­வ­ரம் திலீ­ப­னின் நெஞ்­சில் சுதந்­திர தாகத்தை வெகு­வா­கக் கிளப்­பத் தொடங்­கி­யது. அந்த வய­தி­லேயே விடு­த­லைப் புலி­க­ளின் அதி­ர­டித் தாக்­கு­தல்­களை மான­சீ­க­மாக மகிழ்ச்சி ததும்ப வர­வேற்­றான் திலீ­பன். தமிழ்த்­து­ரோகி துரை­யப்பா கொலை செய்­யப்­பட்­ட­போது ஆனந்­தக் கூத்­தா­டி­ய­வன் திலீ­பன்.

1982ஆம் ஆண்டு நடை­பெற்ற கல்­விப் பொதுத் தரா­த­ரம் பத்­தி­ரப்­ப­ரீட்­சை­யில் (உயர்­த­ரம்) சகல பாடங்­க­ளி­லும் சிறப்­பான சித்­தி­க­ளைப்பெற்று யாழ். பல்­க­லைக்­க­ழக மருத்­துவபீடத்­துக்­குத் தெரி­வா­னான். ஆனால், தமிழ் மக்­கள் கொடு­மை­யான முறை­யில் கொலை செய்­யப்­பட்­டது கண்டு அவன் மனம் தவித்­தது. தமிழ் மக்­க­ளைக் காப்­ப­தற்­காக தன் மருத்துவக் கல்­வியை உத­றித்­தள்­ளிய திலீ­பன், விடு­தலை இயக்­கத்­தில் சேர்ந்து தமிழ் மண்­ணுக்­கா­கப் போரா­டத் தீர்­மா­னித்­தான்.

தமிழ் மக்­க­ளைக் காப்­ப­தற்­காக அல்­லும் பக­லும் போரா­டிக்­கொண்­டி­ருந்த தலை­வர் வே.பிர­பா­க­ர­னு­டன் எப்­ப­டி­யா­வது இணைய வேண்­டு­மென்­பதே அவ­னது கன­வா­க­வும் இலட்­சி­ய­மா­க­வும் இருந்­தது. தலை­வர் பிர­பா­வைத் தன் மான­சீ­கக் குரு­வாக வரித்­துக்­கொண்ட பார்த்தீ­பன் (திலீ­பன்) 1983ஆம் ஆண்டு தமி­ழீழ விடு­த­லைப்புலி­கள் இயக்­கத்­தில் அங்­கத்­த­ன­வாக சேர்ந்­தான். ஆரம்­பத்­தில் கப்­டன் பண்­டி­த­ரு­டன் இணைந்து பரப்புரை வேலை­க­ளைக் கவ­னித்­து­வந்த அவன் பின் மானிப்­பாய், வட்­டுக்­கோட்­டைப் பகு­தி­யில் பரப்புரைப் பொறுப்­பா­ள­னாக நிய­மிக்­கப்­பட்­டான்.

1983ஆம் ஆண்­டின் கடை­சிப் பகு­தி­யில் தமிழ்ப்­ப­கு­தி­யில் பரப்புரை வேலை­க­ளில் ஈடு­பட்ட விடு­தலைப்புலி­க­ளுக்கு தலைக்குமேல் ஆபத்து இருந்­தது என்­பது எல்­லோ­ருக்­கும் தெரி­யும். இந்த ஆபத்து இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்து மட்­டு­மல்ல வேறு பல வழி­க­ளி­லும் இருந்­தது. இவை­க­ளி­லெல்­லாம் எதிர்­நீச்­சல் போட்டு தன் பணி­யில் வெற்றி கண்­ட­வன் திலீ­பன்.
தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் யாழ். பிராந்­திய தள­ப­தி­யா­கக் கட­மை­யாற்­றிய கிட்டு அண்ணா திலீ­ப­னின் செயற்றிற­னி­லும், அயா­ராத முயற்­சி­யி­லும் நம்­பிக்கை வைத்­தார். கடமை, கண்­ணி­யம், கட்­டுப்­பாடு, உறுதி, உழைப்பு எல்­லா­வற்­றி­லுமே திற­மை­யா­கத் திகழ்ந்த திலீ­பன் அவர்­களை தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் அர­சி­யல் பிரி­வுப் பொறுப்­பா­ள­னாக நிய­மிக்­கும்­படி தலை­வர் பிர­பா­வி­டம் பரிந்துரை செய்­தார் கிட்டு.

திலீ­பன் அந்தப் பொறுப்­புக்கு நிய­மிக்­கப்­பட்ட பின், தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் வர­லாற்­றில் ஓர் புதிய அத்­தி­யா­யம் ஆரம்­ப­மா­யிற்று. திலீ­பன் தமிழ் மக்­களை அர­சி­யல் மயப்­ப­டுத்­து­வ­தற்­காக அதற்­காக அல்­லும் பக­லும் உழைத்த அதே­வேளை, தள­பதி கிட்­டு­வு­டன் இணைந்து பல தாக்­கு­தல் திட்­டங்­க­ளை­யும் வகுத்­தான். அநேக தாக்­கு­தல்­க­ளில் தானே நேர­டி­யாக ஆயு­த­மேந்­திப் போரா­டி­னான். வல்­வை­யில் ஏற்­பட்ட விடு­த­லைப் புலி­கள்-––இரா­ணுவ நேரடி மோதல் ஒன்­றில் வயிற்­றில் குண்டு பாய்ந்து சத்­திரசிகிச்­சைக்கு ஆளாக்­கப்­பட்­டான். அப்­போது அவ­னது குட­லின் 14 அங்­கு­லம் வெட்டி வீசப்­பட்­டது. அதை­யும் தமி­ழி­னத்­துக்­காக ஏற்­றுக்­கொண்­டான். மூன்றுமுறை சத்திர­சி­கிச்சை செய்­யப்­பட்ட அவன், மிக­வும் பல­வீ­ன­ம­டைந்­தான். ஆனால், மனஉறுதி மட்­டும் தள­ர­வில்லை.

« « « «
காலை 9.30 மணி! பாட­சா­லைப் பிள்­ளை­கள் வரி­சை­யாக வந்து திலீ­ப­னைச் சந்­தித்து விடை­பெ­று­கி­றார்­கள். எல்­லோ­ரு­ட­னும் அவர் அன்­பா­கப் பேசு­கி­றார். ‘வோக்­கி­டோக்கி’ யில் தலை­வ­ரு­டன் சில நிமி­டங்­கள் பேசு­கி­றார். பேசி­விட்டு அந்த மண்­ணிற ‘வானை’ நோக்கி நடக்­கி­றார். எல்­லோ­ரும் பின் தொடர்­கி­றோம். ஆம்! அவ­ரின் தியா­கப் பய­ணம் ஆரம்­ப­மாகி விட்­டது. மிக மிடுக்­காக நடந்து முன் ஆச­னத்­தில் ஏறு­கி­றார், வான் நல்­லூர்க் கந்­த­சாமி கோயிலை நோக்கி ஓடு­கி­றது. பாதை­யின் இரு பக்­கத்­தி­லும் மாண­வர்­கள், பொது­மக்­கள் ஆகி­யோர் கைய­சைத்து வழி­ய­னுப்­பு­கி­றார்­கள்.

வான் நின்­ற­தும், பிர­தித் தலை­வர் மாத்தையா, எதிர்­வந்து நின்று, திலீ­ப­னைக் கட்டி அணைத்து வர­வேற்று, உண்­ணா­வி­ரத மேடைக்கு அழைத்­துச் செல்­கி­றார். நாங்­க­ளும் பின்­னால் போய்க் கொண்­டிருக்­கி­றோம். எதிர்­பா­ராத வித­மாக அந்த நிகழ்ச்சி நடக்­கி­றது. வய­தான ஓர் அம்மா ஒளி தவ­ழும் கண்­க­ளில் கண்­ணீர் மல்க, திலீ­பனை மறித்து, தன் கையில் சுமந்­து­வந்த அர்ச்­ச­னைச் சரை­யி­லி­ருந்து நடுங்­கும் விரல் க­ளால் திரு­நீற்றை எடுத்து திலீ­ப­னின் நெற்­றி­யில் பூசு­கி­றார். தாயற்ற திலீ­பன் அந்­தத் தாயின் பாச உணர்­வில் மூழ்­கிப்­போய் விடு­கி­றார். காலை 9.45 மணி உண்­ணா­வி­ரத மேடை­யிலே உள்ள நாற்­கா­லி­யில் திலீ­பனை அமர வைக்­கி­றார் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் பிர­தித் தலை­வர் மாத்தையா.
திலீ­ப­னின் தியா­கப் பய­ணம் ஆரம்­ப­மா­கி­விட்­டது. அங்கு பக்­கத்­தி­லி­ருந்த மேடை­யில் பிர­சாத் தலை­மை­யில் கூட்­டம் நடை­பெற்­றது. நடே­சன், காசி ஆனந்­தன் ஆகி­யோர் திலீ­ப­னின் உண்­ணா­வி­ர­தம் எதற்­காக ஆரம்­பிக்­கப்­ப­டு­கி­றது என்­பது பற்றி விளக்­க­ம­ளித்­தார்­கள். தமிழ் மக்­க­ளி­ன­தும் தமி­ழர் தாய­கத்­தி­ன­தும் உரி­மை­க­ளைப் பேணும் நோக்­க­மாக, இந்­தியா மக்­க­ளி­னது கவ­னத்தை ஈர்க்­கும் வகை­யில், தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளால் முன்­வைக்­கப்­பட்ட ஐந்து கோரிக்­கை­க­ளும் பின்­வ­ரு­வன:

  1. பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் இன்­னும் தடுப்­புக் காவ­லில் அல்­லது சிறை­க­ளில் உள்­ளோர் விடு­விக்­கப்­பட வேண்­டும்.
  2. புனர்­வாழ்வு என்ற பெய­ரில் தமி­ழர் தாய­கத்­தில் நடத்­தப்­ப­டும் சிங்­க­ளக் குடி­யேற்­றம் உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­டல் வேண்­டும்.
  3. இடைக்­கால அரசு நிறு­வப்­ப­டும் வரை ‘புனர்­வாழ்வு’ என்று அழைக்­கப்­ப­டும் சகல வேலை­க­ளும் நிறுத்­தப்­பட வேண்­டும்.
  4. வடக்கு -– கிழக்கு மாகா­ணங்­க­ளில் பொலிஸ் நிலை­யங்­கள் திறக்­கப்­ப­டு­வது உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்­டும்.
  5. இந்­திய அமை­திப்­ப­டை­யின் மேற்­பார்­வை­யில், ஊர் கா­வல் படை என அழைக்­கப்­ப­டு­வோ­ருக்கு வழங்­கப்­பெற்ற ஆயு­தங்­கள் திரும்­பப் பெறப்­பட்டு, தமிழ்க் கிரா­மங்­கள், பள்­ளிக்­கூ­டங்­கள் ஆகி­ய­வற்­றில் குடி­கொண்­டுள்ள இரா­ணுவ, பொலிஸ் நிலை­யங்­கள் மூடப்­பட வேண்­டும்.

பிர­சாத்­தால் மேற்­படி ஐந்து கோரிக்­கை­க­ளும் வாசிக்­கப்­பட்­டன.
« « « «


பிற்­ப­கல் 2 மணி! திலீ­பன் கம்­பீ­ர­மாக வீற்­றி­ருக்­கி­றார், யோகியிடம் ‘‘படிப்­ப­தற்­குப் புத்­தகங்­கள் வேண்­டும்’’ என்று என் காதுக்­குள் குசு­கு­சுக்­கி­றார் திலீ­பன். நான் ராஜ­னி­டம் சொல்­கி­றேன் பதி­னைந்து நிமி­டங்­க­ளில் பல அரிய நூல்­கள் மேடைக்கு வரு­கின்­றன.

விடு­த­லைப் போராட்­டங்­கள் பற்றி அறி­வ­தில் திலீ­ப­னுக்கு மிகுந்த ஆர்­வம் எப்­போ­துமே உண்டு, பிடல் காஸ்ட்ரோ, சேகு­வேரா, ஹோசி­மின், யாசர் அரா­பத் போன்­ற­வர்­க­ளின் வாழ்க்­கை­யைப் பற்­றிய நூல்­களை நேரம் கிடைக்­கும்­போது படிப்­பார்.

மாலை 5 மணிக்கு பக்­கத்து மேடை­யிலே நிகழ்ச்­சி­கள் ஆரம்­ப­ மா­யிற்று பாட­சாலை மாண­வி­கள் போட்டி போட்­டுக்­கொண்டு கவி­தை­களை வாசிக்­கத் தெடங்­கி­னர். சுசிலா என்ற மாணவி மிக­வும் உணர்ச்­சி­வ­சப்­பட்டு தன் கவி­தையை வாசித்­துக் கொண்­டி­ருந்­தார். அப்­போது ஒரு கட்­டத்­தில் அவர் அழு­தே­விட்­டார் ‘‘அண்ணா திலீபா! இளம் வய­தில் உண்­ணா­மல் தமி­ழி­னத்­துக்­காக…. நீ தவ­மி­ருக்­கும் கோலத்­தைக் காணும் தாய்க்­கு­லத்­தின் கண்­க­ளில் வடி­வது… செந்­நீர்!… சுசி­லா­வின் விம்­ம­ல் திலீ­ப­னின் கவ­னத்­தைத் திருப்­பு­கி­றது. கவிதை தொகுப்பை முடித்­து­விட்டு (பலஸ்­தீ­னக் கவி­தை­கள்), கவிதை மழை­யில் நனை­யத் தொடங்­கி­னார். அவர் விழி­க­ளில் முட்­டிய நீர்த்­தேக்­கத்தை ஒருகணம் என் கண்­கள் காணத் தவ­ற­வில்லை. எத்­தனை இள­கிய மனம் அவ­ருக்கு?

இந்த இளம் குருத்து இன்­னும் எத்­தனை நாள்­க­ளுக்கு ஒரு சொட்டுநீர் கூட அருந்­தா­மல் வாடி வதங்­கப் போகி­றது? அஹிம்­சைப் போராட்­டத்­துக்கே ஆணி­வே­ரா­கத் திகழ்ந்த அண்­ணல் காந்­தி­ய­டி­கள் கூட தனது உண்­ணா­வி­ர­தப் போராட்­டங்­களை நீரா­கா­ரம் அருந்­தித்­தானே நடத்­தி­னார்! ஆனால், நம் திலீ­பன்? உல­கத்­தி­லேயே நான் அறிந்­த­வ­ரை­யில் இரண்­டா­வ­தாக, ஒரு சொட்டு நீர்­கூட அருந்­தா­மல் உண்­ணா­வி­ர­தத்தை ஆரம்­பித்­த­வர் என்ற பெரு­ம­திப்பை பெறு­கி­றார்.

அப்­ப­டி­யா­னால் அந்த முதல் நபர் யார்? அவர் வேறு யாரு­மல்ல தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வே.பிர­பா­க­ரன்­தான்! 1986ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் இந்­தி­யா­வில் அவர் இருந்­த­போது, தக­வல் தொடர்­புச் சாத­னங்­களை இந்­திய அரசு கைப்­பற்­றி­ய­தைக் கண்­டித்து, ஒரு சொட்டு நீர்­கூட அருந்­தா­மல் சாகும்வரை உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்தை ஆரம்­பித்து, உல­கில் புதிய அத்­தி­யா­யம் ஒன்றை ஆரம்­பித்­து­ வைத்த பெருமை அவ­ரையே சாரும்.

இரண்­டாம் நாளே இந்­திய அரசு பணிந்­த­தால் அந்த உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்­தில் அவர் வெற்றி பெற்­றார். அது­போல், அவ­ரால் உரு­வாக்­கப்­பட்ட திலீ­பன் இன்று குதித்து விட்­டார். அவ­ரது கோரிக்­கை­களை இந்­திய அரசு நிறை­வேற்­று­மா­னால் அவர் உண்­ணா­வி­ர­தத்­தைக் கைவி­டத் தயார். இல்­லை­யென்­றால் இறுதி மூச்­சு­வரை அதைத் தொட­ரத் தயா­ராக இருந்­தார். இந்த உண்­ணா­வி­ர­தம் இந்­திய அர­சின் தலை­யீட்டால் வெற்றி பெறு­மா­னால் அந்த வெற்றி திலீ­ப­னைச் சாரும்.

அது­போல் இந்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்­கா­மல் இறு­தி­வரை உண்­ணா­வி­ர­தம் இருந்தே திலீ­பன் இறக்க நேரிட்­டால் அதில் கிடைக்­கும் தோல்­வி­யும் திலீ­ப­னுக்கு ஒரு மாபெ­ரும் வெற்­றி­தான். உல­கில் புதிய அத்­தி­யா­யம் ஒன்­றின் ‘சிருஷ்டி கர்த்தா’ என்ற பெருமை அவ­னையே சாரும். ஆனால், அதற்­காக எங்­கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்­டுமா? இறைவா! திலீ­ப­னைக் காப்­பாற்­றி­விடு! கூடி­யி­ருந்த மக்­கள் நல்­லூர்க் கந்­த­னி­டம் அடிக்­கடி இப்­படி வேண்­டிக்­கொள்­கி­றார்­கள். இதை நான் அவ­தா­னிக்­கி­றேன். பழந்­த­மிழ் மன்­னா­கிய சங்­கி­லி­யன் அர­சாண்ட நல்­லூர் அர­ச­தா­னி­யிலே அது­வும் தமிழ்க் கட­வு­ளா­கிய கும­ர­னின் சந்நிதி­யில், ஒரு இளம்­புலி உண்­ணா­மல் துவண்டு கிடக்­கி­றது. ஒரு நல்ல முடிவு கிடைக்­க ­வேண்­டும், இல்­லை­யேல் உல­கில் நீதி செத்­து­வி­டும் எனக்­குள் இப்­படி எண்­ணிக் கொள்­கி­றேன்.

« « « «


அன்று இரவு பதி­னொரு மணி­ய­ள­வில் தலை­வர் வே.பிர­பா­க­ரன் திலீ­ப­னைப் பார்ப்­ப­தற்­காக மேடைக்கு வரு­கி­றார். அவ­ரு­டன் சொர்­ணம், இம்­ரான், அஜித், சங்­கர், மாத்­தையா, ஜொனி இப்­படி பல­ரும் வரு­கின்­ற­னர். வெகு­நே­ரம்­வரை தலை­வ­ரு­டன் உரை­யா­டிக் கொண்­டி­ருந்­தார் திலீ­பன். யாரை­யும் அதிகநேரம் பேச அனு­ம­திக்க வேண்­டாம் என்று, போகும்­போது என்­னி­டம் கூறி­விட்­டுச் சென்­றார் தலை­வர், நீர், உணவு உட்­கொள்­ளாத ஒரு­வர், தொடர்ந்து பேசிக் கொண்­டி­ருந்­தால் விரை­வில் களைப்­ப­டைந்­து­வி­டு­வார். அத­னால்­தான் தலை­வர் அப்­ப­டிக் கூறி­விட்­டுச் சென்­றார். அன்­றி­ரவு பத்­தி­ரி­கைத் துறை­யைச் சார்ந்­த­வர்­க­ளும் திலீ­ப­னைப் பார்க்க மேடைக்கு வந்­த­னர். ‘முர­சொலி’ ஆசி­ரி­யர் திருச்­செல்­வம், ஈழ­மு­ர­சைச் சேர்ந்த பஷீர் போன்­றோ­ரு­டன் திலீ­பன் மனம்­தி­றந்து பேசி­னார். அவ­ரைக் கட்­டுப்­ப­டுத்த எனக்கு மிக­வும் சங்­க­ட­மாக இருந்­தது. அதி­கம் பேசி உடம்­பைக் கெடுத்­துக்­கொள்­ளப் போகி­றாரே என்­ப­தால் அவரை அன்­பா­கக் கடிந்து கொண்­டேன். நள்ளிரவு சுமார் 12 மணி­ய­ள­வில் படுக்­கைக்­குச் சென்­றார். அவர் ஆழ்ந்து உறங்­கத் தொடங்­கி­ய­போது நேரம் 1.30 மணி, அவ­ரின் நாடித்­து­டிப்­பைப் பிடித்து அவ­தா­னிக்­கி­றேன். நாடி­து­டிப்பு :88 சுவா­சத்­து­டிப்பு :20 அவர் சுய­நி­னை­வு­டன் இருக்­கும்­போது வைத்­திய பரி­சோ­தனை செய்­வ­தற்கு அனு­ம­திக்­க­மாட்­டார். தனக்கு உயிர்­மீது ஆசை­யில்லை என்­ப­தால் பரி­சோ­தனை தேவை­யில்லை என்று கூறு­வார். அவர் விருப்­பத்­துக்கு மாறாக உணவோ நீரோ மருத்­து­வமோ இறு­தி­வரை அளிக்கக்கூடா­தென்று முதல் நாளே என்­னி­டம் சத்­தி­யம் வாங்­கி­விட்­டார்.

நானும் ராஜ­னும் அவ­ரின் பக்­கத்­தில் படுத்­து­விட்­டோம். மேடை­யின் மறு­பு­றத்­தில் இரு ‘நவீ­னன்­க­ளும்’ படுக்கை போட்­ட­னர். மேடைக்கு முன்­பாக மக­ளிர் அமைப்பு உறுப்­பி­னர்­க­ளும், பொதுமக்­க­ளும் கொட்­டக் கொட்ட கண்விழித்­துக் கொண்­டி­ருந்­த­னர்.

இந்த தியாக தீபத்தின் உண்ணாவிரத போராட்டத்தின் முதல்நாள் முடிவு பெற்றது.

தியாக வேள்வி தொடரும்……..

  • மு.வே.யோ.வாஞ்சிநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *