இந்தி திணிப்புக்கு முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு

தமிழ்மொழி சார்ந்த விடயங்களை புறக்கணித்து தங்களுடைய நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்றும் வகையில் மதம் சார்ந்த விடயங்களையும் மொழி சார்ந்த விடயங்களையும் இங்கு இந்தியா திணிக்க முயற்சிக்கின்றது. இந்தியா இந்தி மொழியை திணிப்பதற்கு முன் எங்களுடைய தேசிய பிரச்சினையாக இருக்கின்ற உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வை வலியுறுத்தவேண்டும்.

இவ்வாறு தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சு.நிஷாந்தன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு– கிழக்கில் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கான எந்தத் திட்டத்தை இந்தியா மேற்கொள்வதாகத் தெரியவில்லை.

தமிழ் சார்ந்த விஷயங்களை புறக்கணித்து தங்களுடைய நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்றும் வகையில் மதம் சார்ந்த விடயங்களையும் மொழி சார்ந்த விடயங்களையும் இங்கு திணித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான திணிப்புக்களை நிறுத்தி எமது கலாசாரத்தை சிதைப்பதை தவிர்க்க வேண்டும்.

13ஆ ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா வலியுறுத்துகின்றது. ஆனால் 13 ஆம் திருத்தத்தை முற்றுமுழுதாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனை இந்தியா புரிந்துகொள்ளவேண்டும்.

13 என்பது தமிழ் மக்களின் இறுதி தீர்வு கிடையாது. இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தில் வடக்கு– கிழக்கு இணைத்திருப்பதாக எழுதப்பட்டிருந்தது. இந்திய தூதரகமோ இந்திய சார்பானவர்களோ, இந்தி மொழியை திணிப்பதற்கு முன்பாகவோ அல்லது மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை அரங்கேற்ற முன்பாகவோ முதலில் எங்களுடைய தேசிய பிரச்சினையாக இருக்கின்ற உரிமைப் பிரச்சினைகளில் தலையிடவேண்டும்.

வடக்கு – கிழக்கை இணைத்து நான்கு வருடங்களாக இடம்பெறாமல் உள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்.

அந்த மாகாணசபை ஊடாக காணி பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக் கொடுங்கள்.

அதன் பின்னர் உங்கள் நிகழ்வுகளை இங்கே வந்து கொண்டாடுங்கள்.நாங்களும் இணைந்து கொண்டாடுகிறோம். – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *