
லெபனான்,செப் 15
லெபனான் நாட்டில் சொந்தப் பணத்தை எடுக்க அதிகாரிகள் ஒத்துழைக்காததால், வங்கிக்குள் புகுந்து ஒரு பெண் தனது பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சலி ஹபீஸ் என்ற பெண் தனது வங்கி சேமிப்புத் தொகை 13,000 டொலரை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஆனால் அதிகாரிகள் கெடுபிடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பெண் வங்கிக்குள் புகுந்து பொம்மைத்துப்பாக்கியைக் காட்டி தனது சொந்த பணத்தை கொள்ளையடித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அந்த நாடு பண நெருக்காடியால் சிக்கித் தவித்து வரும் நிலையில், வங்கிகளில் பணம் எடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. சலி ஹபீஸின் சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், தன் சகோதரியின் புற்றுநோய் சிகிச்சைக்காக தன்னுடைய சேமிப்புப் பணத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் மாதத்துக்கு 200 டொலா் மட்டுமே எடுக்க முடியும் என்று வங்கி அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றனர்.
அதையடுத்து, தன்னைப் போலவே பாதிக்கப்பட்ட நபர்களுடன் இணைந்து வங்கிக்குள் புகுந்து பொம்மைத்துப்பாக்கியைக் காட்டி அதிகாரிகளை மிரட்டி, பணத்தை கொள்ளையடித்திருக்கிறார். அப்போது அந்தச் சம்பவத்தை சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பினாா். லெபனானில் ஏராளமான மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.