
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரி ஒருவருடன் தொடர்பு கொண்டு சட்டவிரோதமான முறையில் குண்டுகளை தயாரித்ததாக கூறப்படும் 6 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சினமன் கிராண்ட் ஹோட்டலில் தன்னைத்தானே வெடிக்கச் செய்து கொண்ட தற்கொலைக் குண்டுதாரியுடன் வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை பகுதியில் வெடிகுண்டுகளை தயாரித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவத்தின் சந்தேகநபர்களான மொஹமட் சத்கர், மொஹமட் அஷ்ரோப், இஷாக் மொஹிதீன், மொஹமட் பௌசி மற்றும் மொஹமட் அப்துல்லா உட்பட்ட 6 பேரை எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த சம்பவத்தில் 31 சாட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் 21 குண்டுகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் அடுத்த விசாரணை அக்டோபர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்