அறிவுரை கூற சம்பந்தனுக்குத் தகுதி இல்லை! – விமல் பதிலடி

“சம்பந்தனோ அல்லது அவர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் அறிவுரை கூற எந்தத் தகுதியும் இல்லை.” – இவ்வாறு முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாட்டைத் துண்டாக்க முயலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எந்தக் கருத்துக்களுக்கும் அரசு செவிசாய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது தீர்மானங்கள் அடுக்கடுக்காக நிறைவேற்றப்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம். இது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

கடந்த நல்லாட்சி அரசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கை மேலோங்கி இருந்தமையால் இலங்கை மீதான அன்றைய ஐ.நா. தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தமையும் மாபெரும் தவறாகும்.

எனினும், என்னதான் தீர்மானங்களை இலங்கை மீது ஐ.நா. அடுக்கடுக்காக நிறைவேற்றினாலும் இங்கு எதுவும் நடக்கப்போவதில்லை. இதைச் சம்பந்தனும், அவர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *