
உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஒரு விடயமாகும்.
எம்மை போன்ற நாடுகளை ஏதேனுமொரு வகையில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ள நாடுகளும் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் முன்வைக்கப்படுகின்றன.
எனவே இது புதியதொரு விடயமல்ல. உலகின் பிரபல நாடுகளான சீனா, ரஷ்யா உள்ளிட்டவை எமக்கு ஆதரவளிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றன.
எம்மை போன்ற நாடுகளை ஏதேனுமொரு வகையில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நாடுகளும் உள்ளன. இதனை வரலாற்றிலும் நாம் அனுபவித்திருக்கின்றோம். எனவே இவற்றைக் கடந்து செல்ல வேண்டும்.
1988 மற்றும் 89 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பழிவாங்கல்கள் , அடக்குமுறைகளை அனைவரும் மறந்துவிட்டனர். அக்காலப்பகுதியில் சுமார் 60,000 இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அன்று காணப்பட்ட ஆட்சிகள் குறித்து எதனையும் நான் குறிப்பிடப்போவதில்லை. ஆனால் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன.
எல்.டி.டி.ஈ, இனங்காணப்படாத துப்பாக்கிதாரிகள் மற்றும் அரச பயங்ரவாதிகள் என பல தரப்பினர் அன்று காணப்பட்டனர். இவற்றுக்கு மத்தியிலேயே அன்று நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு என்ற ஒன்று காணப்படவில்லை.
தற்போது எமது நாட்டில் சாதாரண பிரஜையொருவருக்கு சுதந்திரமாக வாழக்கூடிய உரிமை காணப்பட வேண்டும். எவரேனும் அதற்கு இடையூறு ஏற்படுத்துவார்களாயின் அது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு பொறுப்பு காணப்படுகிறது. எனவே தான் வாக்குமூலம் பெறப்படுகிறது நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் 1988 காலப்பகுதிகளில் இவ்வாறான முறைமைகள் காணப்படவில்லை. வீதிகளில் ஒரு சடலத்தை எரிப்பதற்கு இரு டயர்கள் போதுமானவையாகக் காணப்பட்டன. அந்த யுகத்தை மறந்து இன்று பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இவை தெரியாதல்லவா? எனவே நாம் அவை தொடர்பில் தெளிவுபடுத்துவோம்.
சர்வதேச அமைப்புக்கள் மந்த போசனை தொடர்பிலும் , போஷாக்கின்மை தொடர்பிலும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் எவருமே எமக்கு உதவ முன்வரவில்லை.
எனவே தேசிய ரீதியில் இவற்றுக்கு தீர்வு கண்டு சவால்களை எதிர்கொள்ளும் பொறுப்பினை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.