தொலைபேசி பாவனையினால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பு!

கையடக்கத் தொலைபேசி பாவனையினால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கும் பார்வைக்கும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைத்திய ஆலோசகர் வைத்தியர் வருண குணதிலக்க இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இதற்கமைய 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளைக்கு 02 மணி நேரம் மட்டுமே கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்று முதல் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாவதால் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள், எரிச்சல், ஆக்ரோஷமான நடத்தை மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

அதேபோன்று சரியான முடிவுகளை எடுக்கும் திறனையும் பாதிக்கின்றது என வைத்திய ஆலோசகர் வைத்தியர் வருண குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கணினி அல்லது மடிக்கணினி பயன்படுத்தும் திரை மற்றும் கண்களுக்கு இடையே 18 அங்குல இடைவெளியை பராமரிப்பது கணினியைப் பயன்படுத்த மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட முறையாகக் கருதப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, சிறுவர்கள் தங்கள் படிப்புக்கு கணினி அல்லது அதேபோன்ற அகலமான திரையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் வைத்திய ஆலோசகர் வைத்தியர் வருண குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான உடலைப் பேணுவதற்கு, சிறுவர்கள் அல்லது பெரியவர்கள் இரவில் ஏழு மணிநேரம் தூங்குவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உறங்கும் முறையில் ஏற்படும் மாற்றங்கள் அதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன் ஆகிய விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *