
திலீபனின் நினைவேந்தலில் மட்டுமல்ல, எந்த நினைவேந்தல்களிலும் கட்சி அரசியலைக் கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம் என்று தயவுடன் வேண்டுகிறேன். அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் முத்துக்குமார் மனோகர் (பஷீர் காக்கா) ஆகிய நான் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன் – என்று கோரியுள்ளார் விடுதலைப் புலிகளின் மூத்த (முன்னாள்) போராளியான பஷீர் காக்கா.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் நேற்று ஆரம்பமாகின. இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் அணிக்கும், மணிவண்ணன் அணியினருக்கும் இடையில் நேற்றும் குழப்பங்கள் ஏற்பட்டன. இதையடுத்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே பஷீர் காக்கா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது:
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் பிறிதொரு அணியினரைச் சாடும் வகையில் சட்டத்தரணி சுகாஷ் உரையாற்றியமை எமக்கு வேதனையை உண்டாக்குகிறது. நேற்று (நேற்றுமுன்தினம்) இவர் சார்ந்த கட்சியைச் சேர்ந்தவரும் திலீபனை நேரில் கண்டவர்களில் ஒருவருமாகிய பொன் மாஸ்டரிடம் ‘இந்த நிகழ்வை பொதுநிகழ்வாக நடத்துவதில் உங்களுக்குள்ள சங்கடங்கள் என்ன?’ என்று கேட்டேன். ‘எதுவும் இல்லை’ என பதிலளித்தார். அது திருப்தி அளித்தது. அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் விதத்தில் சட்டத்தரணி சுகாஷ் இன்றையதினம் (நேற்று) நடந்து கொண்டார்.
ஏற்கனவே மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏனைய கட்சிகளைத் தாக்கும் களமாகப் பயன்படுத்த வேண்டாம் என அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமாரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதனைக் கடைப்பிடிப்பதாக அவர் என்னிடம் உறுதியளித்தார். எனினும் கிளிநொச்சியில் நிகழ்ந்த மாவீரர்களின் பெற்றோருடைய கௌரவிப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சாடியமை தொடர்பில் பத்திரிகையில் செய்தி வெளியானபோது மிகவும் வேதனைப்பட்டேன்.
அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக பொன் மாஸ்டரை சந்தித்து உரையாடினேன். எனவே இவ்வாண்டு திலீபனின் நினைவு நிறைவடையும் வரைக்கும் அரசியலை கலக்காமல் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மன்றாட்டமாக அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன். எமது உணர்வுகளை எதிர்காலத்தில் மதிப்பார்கள் என நம்புகிறேன் – என்றுள்ளது.