
எதிர்வரும் நாள்களில் அவசர அறுவைசிகிச்சைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை சேமிப்பதற்காக வழமையான அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்ததாவது:
தற்போது மருத்துவ உபகரணங்களுக்கு மீண்டும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எஞ்சியிருக்கின்ற மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் இருதய அறுவை சிகிச்சை போன்ற உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளுக்காக சேமிக்கவேண்டியுள்ளது.
மயக்கமருந்து தொடர்புடைய மருத்துவ உபகரணங்கள் மற்றும் அன்டிபயோட்கெ்ஸ் உள்ளிட்டவற்றுக்கு பற்றாக்குறை காணப்படுவதால் வழக்கமான மருத்துவ நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுகின்றது.
ஆறுமாதங்களுக்கு முன்னரே இந்த வழமையான அறுவை சிகிச்சைகளுக்கு மருத்துவர்கள் அனுமதி வழங்கிவிட்டனர்.
எனினும் அவசர அறுவைசிகிச்சைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை சேமிப்பதற்காக அவர்களுக்கு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் மருத்துவமனைகள் திருப்பி அனுப்பிவிடுகின்றன.
வரவு – செலவு திட்டத்தில் புற்றுநோய் மருந்துகளுக்கு நிதியொதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்படுமா என்பது கேள்வியே– என்றார்.