தேயிலை தூளை கொண்டுசெல்ல தடை– பொலிஸில் முறைப்பாடு!

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியொன்றுக்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத் தூளை தொழிற்சாலைகளுக்கு வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கப்படாமை தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் இவ்வாறு தடுத்து வருவதாக தோட்ட அதிகாரி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில், ஹபுகஸ்தன்ன தோட்டத்திலமைந்துள்ள தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூளை கொண்டு செல்லும் மஸ்கெலியா நகரில் அமைந்துள்ள பி.எம்.எம். நிறுவனத்தைச் சேர்ந்த எல்.கே. 9921 இலக்கம் கொண்ட லொறி நேற்றுமுன்தினம் (14) தொழிற்சாலைக்கு வந்த போது மஸ்கெலியா உள்ளுராட்சி சபையின் தவிசாளர் செண்பக வள்ளி மற்றும் அவரது மகனும் தேயிலை தூள் ஏற்றிய லொறியை புறப்பட அனுமதிக்கவில்லையெனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் காரில் வந்து லொறி டிரைவரை இழுத்து காருக்குள் ஏற்றிச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொக்கா தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத் தூளை கடந்த 11ஆம் திகதி கொண்டு செல்ல அனுமதிக்காமை தொடர்பில் மற்றுமொரு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும், பொலிஸில் முறைப்பாடு செய்த தோட்ட அதிகாரி, மஸ்கெலியா இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் உட்பட 06 பேர் கொண்ட குழுவும் அதற்கு இடையூறு விளைவித்ததாக குறிப்பிட்டார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இதுகுறித்து, தொழிலாளர் காங்கிரஸினர் பொலிஸாரிடம் தெரிவிக்கையில்,

தினக்கூலியாக, 1,000 ரூபாவை வழங்குவது தொடர்பான தொழிற் சங்க போராட்டத்தின் ஒரு அங்கமாகவே, தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூளை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லையெனக் கூறிமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *