
இந்த நாட்டில் தேர்தல் நடைமுறைகள் மிகவும் ஊழல் நிறைந்ததாகவும் பலவீனமாகவும் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளில் உள்ளக ஜனநாயகம் உள்ளதா என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகத் தெரிவித்த அவர், சில அரசியல் கட்சிகளில் அதிகாரம் ஒரே இடத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டம் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற போதே புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிலர் தேர்தலில் பெரும் தொகையை செலவு செய்கிறார்கள், ஆனால் சில வேட்பாளர்கள் சுவரொட்டி கூட ஒட்ட முடியாதுள்ளனர்.
தேர்தலில் பணச் செலவுகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் இருக்க வேண்டும். அதற்கான செலவினக் கட்டுப்பாட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாகவும் புஞ்சிஹேவா இங்கு மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தற்போது தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் தவிர, ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல பிரிவினருக்கும் தேர்தல் நாளுக்கு முன்னதாக வாக்களிக்கும் வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சிஹேவா கூறினார்.
பிற செய்திகள்